June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை குழப்பிய “பாதுகாப்பு”/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

“Tyagi” that confused the eyes/comedy story/Tapasukumar

8/4/2025
கண்ணாயிரம் தாம்பரம் அருகே ரெயில் தண்டவாளத்தில் வெடிகுண்டுவைத்த டிப்டாப்வாலிபரை போலீசில் பிடித்து கொடுத்தார்.இதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் பிடிபட்ட வாலிபர் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்பது தெரியவர அவரை பிடித்து கொடுத்த கண்ணாயிரத்துக்கு பத்து லட்சம் பரிசு வழங்கப்படும் என்று போலீஸ் அறிவித்த செய்தி காலை பேப்பரில் வந்தது.அதைப் பார்த்துவிட்டு ஒருவன் கண்ணாயிரத்துக்கு போனில் கொலைமிரட்டல் விட அதை போலீசில் சொன்னால் கண்ணை பிடுங்கிவிடுவேன் என்று எச்சரிக்க கண்ணாயிரம் நடுங்கினார்.போலீசார் அவரிடம் யார் போன் பண்ணினா சொல்லுங்க என்று கேட்க,கண்ணாயிரம் பதில் சொல்லாமல் இருந்தார். அவரிடம் போலீசார்.. ஏங்க..உங்ககிட்ட யார் பேசினான்னு நீங்க சொல்லாட்டியும் எங்களுக்கு தெரியும் என்றனர்.
கண்ணாயிரம் திடுக்கிட்டபடி, அதெப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்டார். அதற்கு அவர்கள்..வாங்க.. கண்ணாயிரம் என்று ஒரு அறைக்குள் அழைத்துச்சென்றனர்.
அங்கே ஒரு டேப்ரிக்கார்டை அழுத்த, அதில் கண்ணாயிரம் குரலும் அவரை மிரட்டிய தீவிரவாதி குரலும் ஒலித்தது.அதைக் கேட்ட கண்ணாயிரம்.. இது எப்படி..நான் ஒண்ணும் அவனைப் பத்தி உங்களிடம் சொல்லல.. சரியா..நான் சொன்னா என் கண்ணை பிடுங்கிப்புடுவான் என்றார்.
போலீசார் உடனே, ஏங்க தீவிரவாதி கண்ணை புடுங்கிடுவான்னு எங்ககிட்ட சொல்லிட்டிய.. என்க, அய்யய்யோ.. தெரியாம சொல்லிப்புட்டேன்.. நீங்க அதை மறந்திடுங்க.. என் கண்களை காப்பாத்துங்க என்று கண் கலங்கினார்.
அதற்கு போலீசார், ஏங்க நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க.. உங்களுக்கு இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பு போடப்படும். நீங்க பயப்பட தேவை இல்ல என்றனர்.அதைக்கேட்ட கண்ணாயிரம் வேகமாக, என்ன இசட் பிரிவு பாதுகாப்பா
.முதல்ல.. ஒய்பிரிவு பாதுகாப்புன்னு சொன்னீங்க
.இப்போ ஆங்கிலத்திலே கடைசியாக உள்ள இசட் பிரிவு பாதுகாப்பு என்கிறீங்க.. ஏன் ஏ பிரிவு பாதுகாப்பெல்லாம் கிடையாதா.. என்று அப்பாவியாக கேட்டார்.
உடனே போலீசார் சிரித்தனர். யோவ் நீ விவரமான ஆளுய்யா.. இசட் பிரிவு பாதுகாப்புன்னா.. அது கடைசி ரக பாதுகாப்புன்னு நினைக்கிறியா.. அது அப்படி கிடையாது. தீவிரவாதிகளால் உயிருக்கு ஆபத்து இருந்தால் இந்த இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும்.. துப்பாக்கியோடு போலீஸ் உமருக்கு பாதுகாப்பாக வருவாங்க என்றனர்.
அதைக்கேட்ட கண்ணாயிரம், என் கழுத்தை வெட்டவருவதாக சொன்ன தீவிரவாதி போனில்தான் பேசினான். அவன் எப்படியிருப்பான்னு தெரியாதே.. நான் எப்படி கண்டுபிடிப்பேன் என்று கண்ணாயிரம் அழ, போலீசார் அவரை அமைதிபடுத்தினர். யோவ்..பயப்படாதீரும்.. அந்த தீவிரவாதி லண்டனில் இருந்து பேசி இருக்கான். அதனால அவன் உடனே இங்கேவரமாட்டான் என்று சொல்ல, கண்ணாயிரம் உடனே, ஏங்க அவன் லண்டனிலிருந்து பேசினதா சொல்லுறீங்க.. அங்க இருந்து பேசினா இங்கிலீசில அல்லவா பேசியிருகணும்.. அவன் நல்லா தமிழில் அல்லவா பேசினான். அவன் இங்கேதான் எங்கிருந்தோ பேசி இருப்பான் என்று தன் சந்தேகத்தை எழுப்பினார்.
போலீசார் அவரிடம், உங்க சந்தேகம் நியாயமானதுதான்.. தீவிரவாதிகளுக்கு ஏழு மொழி தெரியும். யாரை மிரட்டுகிறார்களோ அவர்களது மொழியில் மிரட்டுவாங்க. புரியுதா என்க, கண்ணாயிரம், எந்த மொழியில் பேசினாலும் என் உயிருக்கு ஆபத்துதான். என் கழுத்துக்கு வேற எண்ணை போட்டுவைக்கச் சொல்லியிருக்கான் என்று கண்ணாயிரம் கழுத்தை தடவினார்.
உடனே போலீசார், கழுத்துக்கு எண்ணை போடணுமுன்னு சொன்னான் சரி.. என்ன எண்ணைன்னு சொன்னானா என்று கேட்க, கண்ணாயிரம் அப்பாவியாக,என்ன எண்ணைன்னு சொல்லலையே..இப்ப நான் என்ன செய்வேன் என்று மிரள, போலீசார் அவரிடம் ஒண்ணும் பதட்டப்படாதீங்க.. ஏற்கனவே வந்த நம்பருல போன் போட்டு அவனிடம் கேளுங்க.. கழுத்துக்கு என்ன எண்ணை போடணுமுன்னு சொல்லுங்க என்று கேளுங்க என்க கண்ணாயிரம் டென்சன் ஆனார்.
ஏங்க நான் போன் பண்ணி கேட்டா முதல்ல பேசும்போது ஏன் கேட்கல.. உன் நாக்கை அறுத்துப்புடுவேன் என்று மிரட்டினா நான் என்ன செய்யுறது என்று கண்களை கசக்கினார். அதான் இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பு போடப்போறாங்களே.. பிறகு ஏன் பயப்படுறீங்க.. உங்களை ஒண்ணும் செய்ய முடியாது என்று போலீசார் சொல்ல, கண்ணாயிரம்..ம்..நீங்க சொல்லுறீங்க.. நீங்க தூங்க போன நேரத்தில அவன் வந்தா என்ன பண்ணுறது.. போலீஸ் வந்தபிறகு வா என்று சொல்லமுடியுமா.. எதுக்கும் நான் உஷார இருக்கணும்..அவனுக்கு ஏழுமொழி தெரியும் என்று சொல்லுறீங்க..ஏன் அவனுக்கு மும்மொழி கொள்கை பிடிக்காதா.. ஏழுமொழி கொள்கைதான் பிடிக்குமா.. எதுக்கு அத்தனை மொழி படிச்சான் மிரட்டுறதுக்கு இத்தனை மொழி படிக்கணுமா. என்ன கொடுமை அய்யா,என்றார்.
அதற்கு போலீசார், நீங்க சும்மா எங்களை சார் என்று கூப்பிட்டா போதும் என்க கண்ணாயிரம் கன்னத்தை தடவியபடி, இந்த சார் சமாச்சாரமே வேண்டாம். ரெயிலில் சார் என்று ஒருவரை கூப்பிட்டு கன்னத்தில அடிவாங்கினது போதும்..என்றார்.
போலீசார் அதைக் கேட்டு சிரிக்க, கண்ணாயிரமும் சிரித்தார். சார் நீங்கதான் தியாகி என்று போலீசார் சொல்ல.. என்ன நான் தியாகியா? நான் எந்த கட்சியும் கிடையாதே… என்ன எப்படி தியாகின்னு சொல்லலாம் என்றார், கண்ணாயிரம். அதற்கு போலீஸ்காரர் நீங்க அடிவாங்கினாலும் திருப்பி அடிக்காம இருந்தீங்கல்லா.. அதா தியாகி.. என்றார்.
அப்போது கண்ணாயிரம் மனைவி..ஏங்க உங்களுக்கு மீண்டும் போன் என்று சொல்லி செல்போனை நீட்ட கண்ணாயிரம் தலை தெறிக்க ஓடினார்.
-வே.தபசுக்குமார்,புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.