June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை மிரட்டிய மாமனார்/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

The father-in-law who threatened Kannayiram/ Comedy story/ Tapasukumar

13.4.2025
கண்ணாயிரம் ரெயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்த வாலிபரை போலீசில் காட்டிக்கொடுத்ததைத் தொடர்ந்து அவருக்கு தீவிரவாதி போனில் கொலைமிரட்டல் விடுத்தான்.இதனால் கண்ணாயிரம் அரண்டுபோய் இருந்தார்.
இந்த நிலையில் கண்ணாயிரத்துக்கு போன் என்று அவரது மனைவி செல்போனை கொடுக்க, கண்ணாயிரமோ மீண்டும் தீவிரவாதிதான் மிரட்டுகிறான் என்று நினைத்து பதறியபடி அங்கும் இங்கும் ஓடினார். போலீசார் அவரிடம்..ஏங்க ஓடுறீங்க என்று கேட்க, தீவிரவாதி மீண்டும் பேசுறான் என்று சொல்ல, போலீசார் அவரிடம் , நாங்க இருக்கோம்..பயப்படாதீங்க.. என்று சொல்ல, கண்ணாயிரமோ, நீங்க இருப்பீங்க.. நான் இருப்பேனா என்று சந்தேகத்துடன் கேட்டார்.
அதெல்லாம் இருப்பீங்க என்று போலீசார் தைரியம் ஊட்டினர்.
ஆனாலும் கண்ணாயிரம் செல்போனை வாங்காமல் ஓட அவரது மனைவி.. கோபம் அடைந்தார். ஏங்க செல்போனை கையிலே வாங்காமல் ஓடுறீங்க.. என் அப்பாதான் பேசுறாரு.. பேசுங்க என்க,கண்ணாயிரம், அய்யோ அவர் தீவிரவாதியைவிட பயங்கரமான ஆளாச்சே.. நான்பேசமாட்டேன் என்றார்.
உடனே அவர், ஏங்க பயப்படாதீங்க.. என் அப்பா உங்களை பாராட்டத்தான் கூப்பிடுறாரு.. பேசுங்க.. பேசுங்க என்க,கண்ணாயிரம் அவரிடம், பூங்கொடி நீ சொல்லுறதால பேசுறன் என்றபடி செல்போனை கையில்வாங்கி, ஹலோ என்றார்.
எதிர் முனையில் பேசிய கண்ணாயிரம் மாமனார் அருவாஅமாவாசை , அட ராஸ்கோல்.. என்று ஆரம்பித்தார். அதைக்கேட்ட கண்ணாயிரம், என்ன ராஸ்கோலா என்க, அருவாஅமாவாசை , பிறகு என்ன நீ பெரிய இவனா .. நீ படுவாராஸ்கல்தான். என்று திட்டுவது போல் பேச, கண்ணாயிரம் திடுக்கிட்டார்.
ஆனால் அருவாஅமாவாசையோ , ஏய் நான் பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்ன பதில் சொல்லமாட்டேங்கிற..நீ என்ன பெரிய வீரனா..நீ அப்படி என்ன பண்ணி கிழிச்சிட்ட.. உன்படம் பேப்பரில போட்டிருக்கு.. நீயே பயந்தாங்கொள்ளி.. இருட்டினா தனியா வெளியே போகமாட்டே.. நீ தீவிரவாதியை பிடிச்சிக்கொடுத்தீயா.. நேரம்ண்டா.. எல்லாம் நேரம்.. ஆமா உனக்கு பத்து லட்சம் பரிசாம. பத்து லட்சத்துக்கு எத்தனை சைபருன்னு தெரியுமா. ராஸ்கோலு. பேப்பரில படத்தைப் பாத்தேன்.. கம்பீரமா போஸ்கொடுத்திருக்க.. தொலைச்சிருவேன் தொலைச்சி என்று மிரட்டும் வகையில் பேசினார்.
கண்ணாயிரம் என்ன சொல்வதென்றே தெரியாமல் திணறினார்.
உடனை அருவாஅமாவாசை, ஏய்..பணம் காசு வந்திட்டுன்னு உன் நடையை மாத்தின.. தறிச்சிருவேன் காலை. ஒழுங்க நடக்கணும். கண்டவங்களை பாத்தா உன் கண்ணை நோண்டிருவேன்.. என் மகளை தவிர வேறயாரையும் பாக்கக்கூடாது.. ஐம்பது வயசு ஆகப்போகுது நியாபகம் இருக்கட்டும். வேற எங்கேயும் தடம்மாறினா அவ்வளவுதான்.. அருவா ரெடியா இருக்கு.. ஜாக்கிரதை என்க, கண்ணாயிரம் கண்களில் கண்ணீர் கொட்டியது.
அதைப்பார்த்த பூங்கொடி, ஏங்க என் அப்பா நல்லா பாராட்டினாரா.. அதைக்கேட்டு ஆனந்த கண்ணீர் வடிக்கீங்களா.. என்று கேட்க, கண்ணாயிரம்..ம் அவர் என் கண்ணை நோண்டிருவன் என்று மிரட்டுறாரு.. ஏற்கனவே ஒரு தீவிரவாதி என் கண்ணை பறிச்சிருவேன்னு சொன்னான்.இப்போ உங்க அப்பா என் கண்ணை நோண்டிருவன்னு சொல்லுறாரு. எல்லோரும் என் கண்மேல கண்ணா இருக்காங்க என்று கண்ணாயிரம் போனை கட்செய்யாமல் பூங்கொடியிடம் பேச எதிர்முனையில் அருவாஅமாவாசை கத்திக்கொண்டிருந்தார்.
பூங்கொடி போனை வாங்கி தன் தந்தையிடம் பேசினார். ஏம்பா அவர் கண்ணை நோண்டிருவன்னு மிரட்டினிய அவர் பயந்து போயிட்டாரு.. அவரை பாராட்டப் போறேன்னுதானே சொன்னீங்க.. பிறகு ஏன் அவரை ஏன் திட்டினீங்க என்க, அருவாஅமாவாசை. ஏய் படுவாராஸ்கல் என்று செல்லமா மாப்பிள்ளையை பாராட்டதானே செஞ்சேன்… உங்கிட்ட கம்பளைண்டு பண்ணிட்டானா.. கொடு போனை அவன்கிட்ட.. இரண்டு டோஸ்விட்டாதான் சரிவருவான்.. என்க, பூங்கொடி வேண்டாம்பா..உங்க பாராட்டே மிரட்டல்மாதிரி இருக்கு.. நான் அவரிடம் சொல்லிக்கிறேன்..என்க, அவர், அம்மா அவன் ஏதாவது எடக்கு மடக்கு பண்ணினான்னா சொல்லு அருவாளோடு வர்ரேன்.. ராஸ்கோலு என்று சொல்ல, வச்சிருங்கப்பா.. காது இரையுது என்றபடி பூங்கொடி போனை கட்செய்தார்.
அப்பாட.. அப்பா மாறவேமாட்டார்.. என்ற பூங்கொடி ,கண்ணாயிரத்திடம், உங்களை என் அப்பா ரொம்ப பாராட்டுனாரு.. நீ ஒண்ணும் பயப்படாதீங்க என்று சொல்ல, அருவா அமாவாசை மீண்டும் போனில் வந்தார்.
ஏம்மா போனை கட்பண்ணிட்ட அந்த பய கட்பண்ணசொன்னானா.. நீ எங்கே இருக்க.. இதோ அருவாளோடு வருகிறேன் என்க பூங்கொடி போனை மீண்டும் கட்பண்ணினார்.
என்ன சொல்லுறாரு ஏன் போனை கட்பண்ணின என்று கண்ணாயிரம் கேட்க, அதுவா..கண்ணாயிரம் எங்கே இருக்கான் இடத்தை சொல்லு அருவாளோடு வர்ரேன்னு சொல்லுறாரு என்று பூங்கொடி சொல்ல, கண்ணாயிரம், அய்யய்யோ என்று அலறியபடி மீண்டும் ஓடினார்.(தொடரும்)
வே.தபசுகுமார், புதுச்சேரி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.