June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

“எல்லோருக்கும் எல்லாம்” என்று அரசு செயல்பட்டு வருகிறது – மு.க.ஸ்டாலின் பெருமிதம்

1 min read

The government is working towards “everything for everyone” – MK Stalin is proud

16.4.2025
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க சட்ட முன்வடிவை பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எல்லார்க்கும் எல்லாம் என்ற பரந்த உள்ளத்தோடு, திறந்த மனதோடு செயல்பட்டு வருகிற அரசு, இந்த திராவிட மாடல் அரசு. எந்தத் திட்டமாக இருந்தாலும், அது மனிதர்களுடைய மனதையும் மகிழ்விக்க வேண்டும். முகத்தில் புன்னகையையும் வர வைக்க வேண்டுமென்று நினைக்கின்றவன் நான். (மேசையைத் தட்டும் ஒலி) அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மக்கள் வளர்ச்சி என்ற நான்கு சொற்களுக்குள் எல்லாம் அடங்கியிருக்கிறது. அதைத்தான் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்று சொல்கிறோம்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், விளிம்பு நிலை மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் என்று ‘குரலற்றவர்களின் குரலாக’ திராவிட மாடல் ஆட்சி இருக்க வேண்டுமென்றுதான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். என்னுடைய ஒவ்வொரு கையெழுத்தும் அவர்களுடைய வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அடித்தளமாக அமைய வேண்டுமென்று நினைக்கின்றேன். அந்த வகையில், இன்றைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமைந்திருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறையுடன் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற திராவிட மாடல் அரசு, இன்றைக்கு நாம் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு சட்டமுன்வடிவுகளை அறிமுகப்படுத்தப் போகிறோம்.மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தலைவர் கலைஞர் அவர்கள்தான் “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லை முதன்முதலாகப் பரிவோடு உருவாக்கினார். அதே அக்கறையோடுதான் நானும் அந்தத் துறையைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 667 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், இப்போது, இந்த நிதியாண்டில் ஆயிரத்தி 432 கோடியாக, அதாவது ரெண்டு மடங்கு உயர்த்தி இருக்கோம். இன்றைக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதிக்கப்பட இருக்கிறது.மாற்றுத்திறனாளிகளுக்கு கருணை அடிப்படையில் மட்டுமல்ல; உரிமை அடிப்படையில் நாம் திட்டங்களைத் தீட்டி வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவிலேயே, அதிக எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குகிற மாநிலம் நம்முடைய தமிழ்நாடுதான்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திக் கொண்டு வருகிறது. அரசு உயர் பதவிகளில் மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, ஊக்கத்தொகை வழங்கிக் கொண்டு வருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிய கடன் உதவி வழங்கும் திட்டத்தை, அறிவுசார் குறைபாடுடையோர், புறஉலகச் சிந்தனையற்றோர், தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கும் நீட்டித்து அரசாணை வெளியிட்டிருக்கிறோம்.

அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கென நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 4 விழுக்காடு இடஒதுக்கீடு மூலம், கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை ஆயிரத்து 493 மாற்றுத்திறனாளிகள் அரசுப் பணியைப் பெற்றுள்ளனர். இதேபோல, மாற்றுத் திறனாளிகளைப் பணியமர்த்துவதை தனியார்த் துறைகளில் ஊக்குவிப்பதற்காக தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது 10 மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தி இருந்தால், அத்தகைய நிறுவனங்களுக்கு மாதந்தோறும் ஒரு நபருக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் ஊதிய மானியத்தை ஒரு ஆண்டுக்கு அரசு வழங்கும் என்று அறிவித்திருக்கிறோம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நவீனக் கருவிகள் வழங்கும் திட்டம் 125 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறோம். மாற்றுத்திறனாளிகள் மெரினா மற்றும் பெசன்ட் நகர்க் கடற்கரைகளில் கடலுக்கு அருகில் சென்று கடலைக் கண்டு ரசிக்க சிறப்பு மரப்பாதையை உருவாக்கி இருக்கிறோம்.

இதற்கெல்லாம் மகுடம் வைப்பதுபோல, மாற்றுத்திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டுமென்று கடந்த பிப்ரவரி 27 ஆம் நாள் கொளத்தூரில் நடைபெற்ற தந்தை பெரியார் அரசு பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் இதை நான் அறிவித்தேன். அடுத்த நாளே என் வீட்டிற்கு வந்த பேராசிரியர் தீபக் நாதன் அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் தோழர்கள் எனக்கு நன்றியையும், பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள். 12 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்புக் கிடைக்கும். கடைக்கோடியில் இருக்கக்கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கும், அவர்கள் வாழும் ஊரிலேயே மரியாதை கிடைக்கும்.

என்னைச் சந்திக்க வந்தபோது, தீபக் அவர்கள், “இந்த நான்கு ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளிலேயே இதுதான் டாப்” என்று நெகிழ்ச்சியோடு என்னிடம் தெரிவித்தார். அவர்களுக்கான இந்தச் சிறப்புமிகு சட்டம் முன்மொழியக்கூடிய இந்த வேளையிலே, சட்டமன்றத்திலே இருக்கிற பார்வையாளர் மாடத்திலிருந்து இதையெல்லாம் அவர்கள் காண்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளில் அவங்களுடைய உரிமையை நிலைநாட்ட திராவிட மாடல் அரசு உறுதியுடன் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலேயும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில உரிய பிரதிநிதித்துவம் வழங்கக்கூடிய வகையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தக்க சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருந்தோம். இப்போது அந்தச் சட்டமுன்வடிவுகளை முன்மொழிவதை நான் எனது வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்.

அருந்ததியின மக்களுக்கு 3 விழுக்காடு வழங்கும் சட்டமுன்வடிவுகளை இதே மாமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய பெருமையை நான் அடைந்தேன். 2009 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கினார். அன்றைக்கு இருந்த அதே மனநிறைவோடு நான் இன்றைக்கு உங்கள் முன்பு நிற்கிறேன்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் சார்பாக இந்த இரண்டு சட்டமுன்வடிவுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுகிறார்கள்.

இதன்மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்டமுன்வடிவுகள் வழிவகுக்கும். இது, ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்துகிற சமூகநீதியை அடைவதற்கான மற்றுமோர் முன்னெடுப்பு.

இதனை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புர ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் முன்மொழிந்து, சம்பந்தப்பட்ட துறைகள்மூலம் இந்த அவைக்கு வழங்குகிறேன். இந்தச் சட்டமுன்வடிவுகளின் மூலம் மாற்றுத்திறனாளிகளுடைய குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்துகிற வல்லமை பெற்றவர்களாகத் திகழ்வார்கள். (மேசையைத் தட்டும் ஒலி)

ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரம் பொருந்தியவர்களாக உயர்த்துவதும், அதிகாரத்தில் பங்கெடுப்பவர்களாக மாற்றுவதும்தான் திராவிட இயக்கத்தினுடைய நோக்கம். (மேசையைத் தட்டும் ஒலி) அந்த அடிப்படையைக் கொண்டதுதான் இந்தச் சட்டம் என்பதைத் தெரிவித்துக் கொண்டு சட்டமுன்வடிவுகளை இங்கே அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.(பின்னர், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மற்றும் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்டமுன்வடிவு ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிமுகம் செய்தார்.)

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தச் சட்டத் திருத்தத்தினால் விளையப் போகும் பலன் பற்றி ஒரு விவரத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். ஆனால், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, சுமார் 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத் திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துக்களிலும்,388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத் திறனாளிகளும் நியமனம் செய்யப்படுவார்கள்.அவர்களது குரல் அந்த உள்ளாட்சி அமைப்புகளில் எல்லாம் எதிரொலிக்கும். இது இந்தச் சட்டத்தினால் விளையப்போகும் மிகப் பெரிய நன்மை என்பதை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *