தென்காசி அருகே முதியவரை அரிவாள் வெட்டிய 4 பேர் கைது
1 min read
4 arrested for slashing elderly man with sickle near Tenkasi
21.4.2025
தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ள கரிசல்குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை தட்டி எழுப்பி அரிவாளால் வெட்டிய நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கரிசல்குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் கருப்பசாமி என்பவரின் வீட்டிற்கு நள்ளிரவில் வந்த நான்கு போதை ஆசாமிகள் மின் இணைப்பை துண்டித்து விட்டு அவரது பெயரை உச்சரித்து சத்தம் போட்டு உள்ளனர். இதைக் கேட்டு வெளியே வந்த கருப்பசாமியை அந்த போதை ஆசாமிகள் அரிவாளால் வெட்டி யுள்ளனர். இதனை தடுக்க முயன்ற அவரது மகன் ராஜேந்திரனையும் அறிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது பற்றி தகவலறிந்த அச்சன்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த கருப்பசாமி மற்றும் அவரது மகன் ராஜேந்திரனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் முதியவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் பாலாஜி, பூதப்பாண்டியன் என்பவரது மகன் பாலமுருகன், கண்ணன் என்பவரது மகன் சுபாஷ், மற்றும் சுபாஷ் உள்ளிட்ட நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் முதியவர் கருப்பசாமி இரண்டு நாட்களுக்கு முன்பு கஞ்சா போதையில் வந்த ஆசாமிகளை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் நள்ளிரவில் அவரை வீடு தேடி சென்று அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து நான்கு நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள் நீதிபதி அந்த நான்கு நபர்களையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுபடி நான்கு இளைஞர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.