3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min read
M.K. Stalin presents Nammalwar Award to 3 farmers
2.5.2025
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண்மை-உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் அவர்கள் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும், ஊக்குவிக்கும் மற்றும் பிற உயிர்ம விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் இயற்கை வேளாண்மையை விவசாயிகளிடம் பெருமளவில் கொண்டு சேர்த்த “நம்மாழ்வார்” பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அவ்வகையில் 2024-ம் ஆண்டு 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 2025-ம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருது, உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த க.சம்பத்குமாருக்கு முதல் பரிசாக 2.50 லட்சம் ரூபாய் மற்றும் ரூ.10,000/- மதிப்பிலான பதக்கமும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த த.ஜெகதீஸ்க்கு இரண்டாம் பரிசாக 1.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் ரூ.7,000/- மதிப்பிலான பதக்கமும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வே.காளிதாசுக்கு மூன்றாம் பரிசாக 1 லட்சம் ரூபாய் மற்றும் ரூ.5,000/- மதிப்பிலான பதக்கமும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
151 நபர்களுக்கு பணிநியமன ஆணை:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 76 இளநிலை உதவியாளர்கள், 68 தட்டச்சர்கள் மற்றும் 7 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் என மொத்தம் 151 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.