June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

பா.ஜ.க. பெண் நிர்வாகி வெட்டிக்கொலை: 3 பேர் சரண்

1 min read

BJP woman executive hacked to death in the middle of the road

6.5.2025
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் பாஜக பெண் நிர்வாகி சரண்யா (35) நடுரோட்டில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் இருந்த சரண்யாவை, நேற்று மர்ம நபர்கள் சராமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இது தொடர்பாக போலீசார் தரப்பு கூறுகையில், “மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரண்யா(35) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் ஆகி சாமுவேல், சரவணன் என்ற இரு மகன்களுடன் மதுரையில் வசித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 2021-ல் சண்முகசுந்தரம் இறந்துவிட்டதால், சரண்யா பட்டுக்கோட்டை வட்டம், கழுகபுலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன், என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் உதயசூரிபுரம் மீன் மார்க்கெட் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பாலனும், சரண்யாவும் உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர்.

நேற்று (திங்கள் கிழமை) இரவு பாலன், தனது கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது மகன்களை அழைத்துக் கொண்டு சற்று முன்னதாக சென்றுள்ளார். அதன் பின்னர் சரண்யா தனது கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சரண்யா வீட்டிற்கு செல்லும் சந்துப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள், சரண்யாவின் கழுத்து மற்றும் தலையின் பின்பக்கம் வெட்டினர். இதில், சரண்யா தலை துண்டிக்கப்பட்டதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வாட்டாத்திகோட்டை போலீஸ் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் பாஜக முன்னாள் நிர்வாகி சரண்யா கொலை வழக்கில் 3 பேர் மதுரை மாவட்ட கோர்ட்டில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சரண்யாவின் கணவர் பாலனின், முதல் மனைவியின் மகன் கபிலன் மற்றும் குகன் உள்ளிட்ட 3 பேர் சரணடைந்த நிலையில், குற்றம் நடந்த இடத்திற்கு உட்பட்ட கோர்ட்டில் சரணடைய வேண்டும் என்பதால் அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்

பாலனின் சொத்துகளை கபிலனுக்கு வழங்க சரண்யா எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *