ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
1 min read
All-party meeting tomorrow regarding Operation Sindoor
7.5.2025
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்தப்பட்டது. சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக இந்திய ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், பரபரப்பான சூழ்நிலையில், நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க உள்ளார்.
பஹல்காம் சம்பவத்தைத் தொடர்ந்து 2-வது முறையாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.