ஆப்ரேஷன் சிந்தூர்: மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
1 min read
Operation Sindhur: Welcome by M.K. Stalin, Edappadi Palaniswami
7.5.2025
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் துணை நிற்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்திய ராணுவத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் வெளியிட்ட பதிவில், “பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது. நமது தேசத்திற்காக நமது ராணுவத்துடன் தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல் என்பது, நம் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட மிகக் கொடுமையான, மனிதத்திற்கே எதிரான போர். பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்பதை #ஆபரேஷன் சிந்தூர் திடமாக நிரூபித்துள்ளது. “நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான்” என்று தெளிவாக வரையறுத்து, பொதுமக்களுக்கு பாதிப்பின்றி, பயங்கரவாதிகளின் முகாம்களை தகர்த்தெறிந்து, “ஆபரேஷன் சிந்தூரை” வெற்றிகரமாக முடித்த நம் இந்திய இராணுவப் படையின் தீரம் பெருமைக்குரியது. இத்தீரமிகு பதிலடியை முன்னின்று அளித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசுக்கு அதிமுக சார்பில் வாழ்த்துகள்.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத நிலைகளில் இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலுக்கு என் பாராட்டுகள். பிரதமர் மோடி தலைமையின்கீழ் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. வாழ்க, வெல்க தாய்த் திருநாடு என பதிவிட்டுள்ளார்.