இந்திய முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா மறைவு- மோடி இரங்கல்
1 min read
Demise of former Indian shooter Jaspal Rana – PM Modi offers condolences.
12/6/2026
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரரும், பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
49 வயதான ஜஸ்பால் ராணா, உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவு இந்திய விளையாட்டு உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
“ஜஸ்பால் ராணாவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது மறைவு இந்திய விளையாட்டு உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் தனது அசாத்திய சாதனைகள் மூலம் அவர் நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இளம் வீரர்களை அர்ப்பணிப்புடன் வழிநடத்திய சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கினார்.
ஜஸ்பால் ராணாவின் விளையாட்டு மீதான அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் சேவை மனப்பான்மை பலருக்கும் முன்மாதிரியாக இருந்ததாகவும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விளையாட்டு உலகினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் தலைசிறந்த துப்பாக்கி சுடுதல் வீரர்களில் ஒருவராக விளங்கிய ஜஸ்பால் ராணா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். விளையாட்டுத் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக அர்ஜுனா விருது மற்றும் துரோணாச்சாரியார் விருது ஆகிய உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
ஜஸ்பால் ராணாவின் மறைவுக்கு விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.