திருச்சி அருகே 2 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை
1 min read
Couple commits suicide after killing 2 children… Tragedy due to debt problem
14.15.2025
திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் வசித்து வந்தவர் ஜவுளிக்கடை உரிமையாளரான அலெக்ஸ். அவரது மனைவி விக்டோரியா. இவர்களுக்கு 9 மற்றும் 3 வயதில் இரு மகள்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் வசித்து வந்த வீடு இன்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டிற்குள் ஒரு அறையில் தம்பதியினர் இறந்த நிலையில் கிடந்தனர். மற்றொரு அறையில் இரு மகள்களும் இறந்து கிடந்தனர். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் 4 பேரின் சடலங்களை மீட்டு திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், போதிய வருமானம் இல்லாமல் அதிக கடன் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடன் பிரச்சினையில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்த தம்பதி ஒருகட்டத்தில் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். நாம் இருவரும் இறந்துவிட்டால் குழந்தைகள் அனாதையாகிவிடும் என்று எண்ணிய கணவன்-மனைவி அவர்களையும் தங்களுடன் அழைத்து செல்ல முடிவெடுத்தனர்.
அதன்படி, முதலில் தங்களது இரு மகள்களையும் கொலை செய்து பின்னர் தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.