June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா பதிலடி

1 min read

India responds to China on Arunachal Pradesh border issue

15.5.2025
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று அருணாச்சல பிரதேசம். இது சீனா உடன் எல்லையைப் பகிர்ந்து வருகிறது. இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் அருணாச்சல பிரதேசம் தனக்குச் சொந்தமானது என சொல்லி சீனா பல ஆண்டுகளாகவே உரிமை கோரி வருகிறது. இருப்பினும், மத்திய அரசு அதற்குத் தக்கப் பதிலடிகளை கொடுத்து வருகிறது.

முன்னதாக அருணாசலபிரதேசத்தை, ‘ஜாங்னான்’ என்று பெயரிட்டு சீனா அழைத்து வருகிறது. அங்குள்ள 6 இடங்களுக்கு 2017-ம் ஆண்டில் புதிய பெயரை சூட்டியது. அதைத்தொடர்ந்து, 2021-ம் ஆண்டில் 15 இடங்கள், 2023-ம் ஆண்டில் 11 இடங்களுக்கு புதிய பெயர் சூட்டியது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவை சீண்டி பார்க்கும் வகையில், அருணாசல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு தன் மொழியில் பெயர்களை சூட்டியது சீனா. தற்போது மீண்டும் அருணாசல பிரதேசத்தில் பல இடங்களின் பெயரை மாற்ற சீனா முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில், அருணாசல பிரதேசத்தில் பல இடங்களின் பெயரை மாற்ற சீனா மேற்கொண்ட முயற்சியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு பெயரிட சீனா தொடர்ந்து வீண் மற்றும் அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எங்கள் கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்கு இணங்க, அத்தகைய முயற்சிகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.

அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது. பெயரை மாற்றினாலும், உண்மையான யதார்த்தத்தை சீனா மாற்ற முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *