ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய காங். பெண் எம்.எல்.ஏ.வுக்கு அபராதம்
1 min read
Congress woman MLA fined for riding scooter without helmet
23.5.2025
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் பளுகல் பகுதியில் இருசக்கர வாகன பேரணி நடந்தது. இந்த பேரணியை விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேரணியானது புத்தன்சந்தை, மேல்புறம், கழுவன்திட்டை வழியாக குழித்துறைக்கு புறப்பட்டது. பேரணியில் தாரகை கத்பா்ட் எம்.எல்.ஏ. பங்கேற்று ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டினார். குழித்துறை பகுதியில் பேரணி வந்தபோது போக்குவரத்து கண்காணிப்பில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையிலான போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
உடனே போலீசார், ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டியதற்காக தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ.வுக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனர். மேலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தாரகை கத்பர்ட் உள்பட11 பேர் மீது பளுகல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை விதியை மீறியதாக பெண் எம்.எல்.ஏ. மீது போலீசார் நடவடிக்கை எடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.