June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்துக்கு வாலிபர்கள் வைத்த வேட்டு/நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

The young men’s hunt for Kannayiram/comedy story/Tapasukumar

22.6.2025
தாம்பரத்திலிருந்து புதுவைக்கு போலீஸ் வேனில் மனைவி பூங்கொடியுடன் சென்றார். தீவிரவாதியை கண்டுபிடித்தவர் என்று கண்ணாயிரத்துக்கு வழியில் இளைஞர்கள் மாலைபோட்டு வாழ்த்தினர். அந்த மாலையோடு வேனில் தூங்கிய கண்ணாயிரத்தைப் பார்த்த சிலர் அவர் இறந்துவிட்டதாக நினைத்து பேச அவர்களை பூங்கொடி திட்ட அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மாலையும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம் என்று கண்ணாயிரம் எழுந்து வேனில் அமர ,வேன் வேகமாக புறப்பட்டது.
அந்த நேரம் பிண ஊர்வலம் வர அதைப்பார்த்து கண்ணாயிரம் மயங்கிவிழ அவருக்கு முகத்தில் தண்ணீர தெளித்து இன்ஸ்பெக்டர் எழுப்பிவிட, கண்ணாயிரம் கண்விழித்துப்பார்த்தார். அவரிடம், ஏங்க பிணத்தைப் பார்த்து பயப்படுகிற நீங்க.. ஒரு பயங்கரவாதியை கண்டுபிடிச்சி கொடுத்திருக்கீங்க.. நீங்க பெரிய ஆள் தான் என்க, கண்ணாயிரமோ.. அது வந்து என்று இழுக்க, இன்ஸ்பெக்டர், ஓ. புகழ்வது உங்களுக்கு பிடிக்காதா..பரவாயில்லை. ஆனா தீவிரவாதியை பிடிச்சிக்கொடுத்து புதுவைக்கு பெயர் வாங்கி கொடுத்த உங்களை பாராட்டாமல் இருக்கமுடியாது என்று புகழ்ந்தார்.
உடனே கண்ணாயிரம், அது வந்து.. என்று மீண்டும் சொல்ல, இன்ஸ்பெக்டர், உங்களுக்கு எவ்வளவு தன்னடக்கம் பாருங்க.. கடமையைச் செய்தேன்.. என்னை ஏன் பாராட்டுகிறீர்கள் என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது.. ஆனாலும் எங்களால் உங்கள் திறமையை சொல்லாமல் இருக்க முடியவில்லை என்றார்.
அதை கேட்ட கண்ணாயிரம், இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தீவிரவாதி என்னை மிரட்டவச்சிட்டாங்க.. அவன் அரிவாளோடு வந்தா நான் என்ன பண்ணுறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கன்.. இவரு பாராட்டிக்கிட்டு இருக்காரு.. என்ன ஆகப் போகுதோ என்று மனசுக்குள் புலம்பினார்.
அதைப் பார்த்த இன்ஸ்பெக்டர், என்னமோ யோசிக்கிங்க.. அடுத்த தீவிரவாதியை எப்படி பிடிக்கலாமுன்னு நினைக்கிறீங்க.. நாங்க எப்போதும் உங்க பக்கம் இருப்போம்.. நீங்க புகுந்து விளையாடுங்க என்று இன்ஸ்பெக்டர் சொல்ல, கண்ணாயிரம் விழித்தார்.
என்னடா ஒரு தீவிரவாதியை தீவிரவாதின்னு தெரியாமலேயே போலீசில சொல்லி நான் மாட்டிக்கிட்டேன். இதுல இன்னொரு தீவிரவாதியை பிடிக்கணுமா.. நடக்கிற காரியமா என்று பெருமூச்சு விட்டார்.
வேன் வேகமாக சென்று கொண்டிருந்தது. கண்ணாயிரம் கண்களை மூடி அமர்ந்திருந்தார். பூங்கொடி அவரிடம், ஏங்க முழிச்சி இருங்க என்று அதட்ட, கண்ணாயிரம் மெல்ல கண்களை திறந்தார்.
புதுவை வந்து சேர்ந்தது வேன். அதைப் பார்த்த கண்ணாயிரம், லாஸ்பேட்டையிலே எங்க வீட்டிலே கொண்டுவிட்டிருங்க என்று போலீசாரிடம் சொல்ல, இன்ஸ்பெக்டர் அவரிடம், உங்க வீட்டுவாசலிலே கொண்டுபோய் விட்டுவிட்டு போறோம். சந்தேகப்படும்படியாக யாரும் அருவாளுடன் நின்னா உடனே எங்களுக்கு தகவல் சொல்லுங்க.. உடனே வந்து அவனை அள்ளிக்கிட்டுப் போயி துவை துவைன்னு துவைக்கிறோம் என்க, கண்ணாயிரமோ, அது என்ன அருவாளோடு வேறு வீட்டுக்கு வருவானா.. பயமா இருக்கே என்று நடுங்கினார்.
அப்போது கண்ணாயிரம் வீடு வந்தது. உடனே அவர் வேகமாக வேனை விட்டு இறங்கினார். வீட்டுக்கு போய்விடவேண்டும் என்று அவர் காலை எடுத்துவைத்த போது அவரது ரசிகர்கள் பட்டாசை கொளுத்தி அவர் காலடியில் போட, அது வெடிக்க, கண்ணாயிரம் கதி கலங்கி போனார்.
என்ன சின்னப்புள்ளைத்தனமா இருக்கு.. காலுக்குள்ளே வெடியை போட்டு என்னை காலிபண்ணப் பாக்கிறான்.. யாருரா அவன்.. யாருரா அவன் என்று பட்டாசு போட்ட வாலிபர்களை சத்தம் போட, அவர்கள், ஏங்க இதுக்கே பயப்படுறீங்க.. அடுத்து அணுக்குண்டு இருக்கு என்று அவர்கள் சொல்ல, கண்ணாயிரம் நாலுகால் பாய்ச்சலில் தனது வீட்டு முன் ஓடினார்.
அப்போது அணுகுண்டு வெடித்தது. எங்கும் ஒரே புகையமாக இருந்தது. பூங்கொடி அந்த புகை மண்டலத்துக்குள் கண்ணாயிரத்தை தேடினார்.. ஏங்க எங்கிருக்கிய என்று கேட்க, கண்ணாயிரம் முகமெல்லாம் கரியாகி, நான் இங்கே இருக்கேன் என்று சொல்ல, பூங்கொடி அதை நம்பாமல், ஏங்கே எங்கிருக்கிய என்று கத்த, கண்ணாயிரம் அவர் அருகில் போய் நான்தான் கண்ணாயிரம் என்க , பூங்கொடியோ, நீங்க கண்ணாயிரம் இல்லை என்று ஓட, கண்ணாயிரம் அவரிடம் நான்தான் கண்ணாயிரம் என்று பின்னால் துரத்த, பூங்கொடி காப்பாத்துங்க, காப்பாத்துங்க என்று கதற, ஊர் மக்கள் ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தனர்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்,புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.