துப்பாக்கி போலீசுடன் சென்ற கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min read
The tear that went with the gun to the police/ Comedy story/ Tapasukumar
28/4/2025
கண்ணாயிரம் வெடிகுண்டுவைத்த தீவிரவாதியை காட்டிக்கொடுத்ததால் அவருக்கு பாராட்டுமழை குவிந்து கொண்டே இருந்தது. ஆனாலும் தீவிரவாதி தலையை அறுப்பேன் என்று மிரட்டியதால் கண்ணாயிரம் கொஞ்சம் பயத்தில்தான் இருந்தார்.
அதைப் பார்த்த அவர் மனைவி பூங்கொடி ஏங்க பயப்படுறீங்க.. தீவிரவாதிக்கு உங்க முகம் தெரியாதே.. பிறகு ஏன் பயப்படுறீங்க என்க, கண்ணாயிரம் கோபத்தில், என்ன சொல்லுற நீ.. அதுதான் பேப்பரிலே முகத்தைப் பார்த்தேன் என்று சொன்னானே என்று சொல்ல, பூங்கொடி, ஏங்க பேப்பரில நல்லா தெரியுறீங்க.. நேர்ல அசிங்கமா இருக்கீங்க.. அதனால அவனால உங்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது என்று சொல்ல, கண்ணாயிரம், நான் அழகா இல்லையா என்று கோபப்பட்டார்.
அதற்கு பூங்கொடி, ஏங்க பேப்பரில இருக்கிறமாதிரி நீங்க இல்லை. அதனால அவன் உங்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது என்றார்.
அதற்கு கண்ணாயிரம், அது எப்படி என் போன் நம்பர் சுவிட்ச் ஆப்பாக இருக்குன்னு உன்கநம்பரை கண்டுபிடிச்சி வந்துட்டானே. அப்படியிரூக்கும் போது நாலுபேரிடம் கேட்டு அவன் என்னை அடையாளம் கண்டுக்குவான்.. கழுத்தை வெட்டிப்புடுவான் என்று கதறினார்.
அவரிடம் பூங்கொடி, பயப்படாதீங்க ஹெல்மெட் போட்டுக்குங்க.. யாரையும் உங்களுக்கு அடையாளம் தெரியாது சரியா என்க, கண்ணாயிரம்,ஆமா நல்ல ஐடியாதான் ஹெல்மெட் வாங்கி போட்டுக்கணும்
போலீஸ்காரங்க நாங்க பாத்துக்குவோம் என்று சும்மா சொல்வாங்க.. ஆனா நாமதான் உஷாரா இருக்கணும் என்றார்.
அப்போது பாண்டிச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். டி.ஐ.ஐயிடம் கண்ணாயிரத்துக்கு தீவிரவாதி மிரட்டல் இருப்பதால் பாதுகாப்பாக அழைத்து செல்கிறோம் என்றனர்.
கண்ணாயிரத்துக்கு ஊர் சார்பில் பெரிய அளவில் பாராட்டுவிழா நடத்த ஏற்பாடு நடப்பதாகவும் கண்ணாயிரத்துக்குரிய 10 லட்சம் பரிசு தொகையை அந்த விழாவில் வழங்கினால் நன்றாக இருக்கும் என்றனர்.
டி.ஐ.ஜியும், நல்லது.. நல்லது என்றார்.
பின்னர் பாண்டிச்சேரி போலீசார் கண்ணாயிரத்திடம் வாங்க.. புதுவைக்கு போவோம் வேனில் ஏறுங்க என்க, கண்ணாயிரம்,அப்படியா.. டிக்கெட் கேட்கமாட்டியளா என்று கேட்க, அதெல்லாம் கிடையாது வாங்க என்று போலீசார் அழைத்தனர்.
உடனே கண்ணாயிரம் அப்போ என் மனைவி பூங்கொடியையும் கூப்பிட்டுவரலாமா என்று பணிவுடன் கேட்க, ஆ..வரட்டும் என்று அவர்கள் சொல்ல கண்ணாயிரம் மகிழ்ச்சி அடைந்தார்
பூங்கொடி வா.. டிக்கெட் எடுக்காமல் பாண்டிச்சேரிக்கு போயிடலாம் என்க, அவர் சிரித்தார்.
உடனே கண்ணாயிரம் சுடிதார் சுதாவிடம், சுதா.. எனக்கு தீவிரவாதி மிரட்டல் இருப்பதால நான் போலீஸ்பாதுகாப்புடன் பாண்டிச்சேரிக்கு போயிடுறேன். நீங்க காரில வாங்க என்று சொல்ல, சுடிதார்சுதாவும், சரி.. போங்க, என்க கண்ணாயிரம் தாமிரபரணி தண்ணீர் உள்ள பாத்திரம் இருந்த பையைத்தூக்கிக்கொண்டு பாண்டிச்சேரி போலீஸ் வேனில் ஏறினார். உடன் பூங்கொடியும் ஏறிக்கொண்டார்.
அப்போது கோடீஸ்வரர் வேகமாக வந்தார்.பாண்டிச்சேரி போறீங்களா..போங்க.. கண்ணாயிரத்தூக்கு பாராட்டுவிழா நடக்கும் போது அங்குவர்றேன். அவருக்கு கொடுக்க வேண்டிய பரிசுதொகையை கொடுக்கிறேன் என்றார். கண்ணாயிரமூம் சரி என்றார்.
பின்னர் வேன் புறப்பட்டது. கண்ணாயிரம் அருகில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் இரண்டு பக்கமும் இருந்தனர். அவர்களைப் பார்த்த கண்ணாயிரம் துப்பாக்கி வெடிச்சிராதே என்று கேட்க, போலீஸ்காரர் மெல்ல, தீவிரவாதி உங்களை கொல்லவந்தா அவனை துப்பாக்கியால் சுடுவோம் என்றார்.
சரி..கொஞ்சம் தள்ளியே இருக்கலாமே எனக்கு பயமா இருக்கு என்று கண்ணாயிரம் சொல்ல, ஆ.. அது முடியாது தீவிரவாதி எப்படி வேண்டுமானாலும் வரலாம். நாங்க உங்களோடு நெருங்கி இருந்தாதான் அவன் பயந்துபோய் உங்களை தாக்கவரமாட்டான் என்றனர்.
கண்ணாயிரம் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியையே பார்த்தார். அது வெடித்து அவர் தலை வெடிப்பது போல் நினைத்து பார்த்தவர், ஆ என்று அலறினார்.
போலீசார் என்ன ஆச்சு என்று கேட்க, எதுவும் ஆயிரக்கூடாதே என்று கத்தினேன் என்றார்.
ஒண்ணும் பயப்படாதீங்க.. எல்லாத்தையும் நாங்களே பாத்துக்கிடுறோம் என்று போலீசார் சொல்ல, கண்ணாயிரம் விழித்தார்.
பூங்கொடி அவரிடம் ஒண்ணும் பயப்படாதீங்க.. என்றார். ஆனாலும் கண்ணாயிரத்துக்கு அந்த துப்பாக்கி பயமுறுத்தியது. ஒரு பள்ளத்தில் சென்றபோது வேன் தூக்கிப்போட, மெதுவா போங்க.. துப்பாக்கி வெடிச்சிடப் போகுது என்று கண்ணாயிரம் கத்தினார்.
வேன் அப்படியே நின்றது. டிரைவர் ஸ்டார்ட் பண்ணினார். ஸ்டாட் ஆகவில்லை. என்ன ஆச்சு.. என்று கண்ணாயிரம் கேட்க, நாலுபேர் தள்ளினாதான் ஸ்டார்ட் ஆகும் என்றார் டிரைவர்.
அதைக்கேட்ட கண்ணாயிரம் நான் இறங்கி தள்ளட்டுமா என்று கேட்க, நீங்க இறங்கக்கூடாது. உங்களூக்கு தீவிரவாதி மிரட்டல் இருக்கு.. கீழே இறங்கும்போது வந்து வெட்டினா என்னபண்ணுறது என்று மிரட்ட கண்ணாயிரம் கழுத்தை தடவினார்.
நாங்க இறங்கி தள்ளலாம்.. உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணுமே.. அதான் துப்பாக்கியோட உங்க பக்கத்திலே இருக்கோம் என்று போலீசார் சொல்ல அவர்களை கண்ணாயிரம் பார்த்தார்.
டிரைவர் ஸ்டார்ட் பண்ணி மீண்டும் பார்த்தார். ஸ்டார்ட் ஆகவில்லை. உடனே டிரைவர் கீழே இறங்கி அந்தவழியாக சென்ற நான்கு வாலிபர்களை அழைத்துவந்து வேனை தள்ளச்சொன்னார்.
அவர்கள் வேன் அருகேவந்து உள்ளே எட்டிப்பார்த்தனர். கண்ணாயிரம் அருகே இரண்டு போலீஸ்காரர்கள் துப்பாக்கியுடன் மிரட்டலாக இருப்பதையும் கண்ணாயிரம் பயந்தபடி இருப்பதையும் பார்த்தனர்.
அவர்கள் கண்ணுக்கு ஏதோ ஒரு கைதியை போலீசார் துப்பாக்கி பாதுகாப்புடன் கொண்டுசெல்வது போல் தெரிந்தது.
கண்ணாயிரத்தைப் பார்த்த வாலிபர்களில் ஒருவன் பாருய்யா.. அந்த ஆளு பாக்க அப்பாவி போல தெரிகிறான். ஆனா பெரிய அக்யூஸ்டா இருப்பான் போலிருக்கு.. அதான் துப்பாக்கி ஏந்திய போலீஸ்பாதுகாப்பு போட்டிருக்கு என்றான்.
மற்றொருவன்,ஆமா.. என்ன தப்பு பண்ணியிருப்பான்.. டபுள் மர்டர் பண்ணுன ரவுடியா இருப்பானோ என்று கேட்க, அடுத்தவன், அது இருக்காது. ரவுடின்னா கன்னத்திலே மரு இருக்குமே.. அந்த ஆளுக்கு மரு இல்லையே.. ஒருவேளை அந்த ஆளு தீவிரவாதியா இருப்பானோ என்று கேட்டான். அப்படின்னா கையிலே விலங்கு போட்டிருப்பாங்களே ஏன் போடலைன்னு ஒருவன் கேட்க, மற்றொருவன் அதெல்லாம் இப்ப எங்க விலங்கு மாட்டுறாங்க.. கைதிகளுக்கு ஏகப்பட்ட சலுகை.. என்று சொன்னான்.
ஒரு பெண்ணும் கூட இருக்கே என்று ஒருவன் பூங்கொடியைப் பாத்து சொல்ல, அது பெண் தீவிரவாதியாக இருக்கும்.. என்று சொல்ல, அதைக்கேட்ட பூங்கொடி வேன் கதவை திறந்துகொண்டு யாரடா தீவிரவாதி என்று சொன்னாய் என்று வாலிபரை தாக்கப் பாய, கண்ணாயிரம், என்ன தீவிரவாதியா என்று அலறினார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.