ஈரானில் 6 விமான நிலையங்களில் தாக்குதல்; 15 போர் விமானங்களை அழிப்பு; இஸ்ரேல் அறிவிப்பு
1 min read
Israel attacks 6 airports in Iran; destroys 15 warplanes; announces
23.6.2025
ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான்- இஸ்ரேல் இடையே, 10 நாட்களாக சண்டை நடக்கிறது. இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்கள், அமெரிக்கர்கள் அவசரமாக சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர். ‘அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை ஈரான் முற்றிலுமாக கைவிடாத வரையில், போரை நிறுத்த மாட்டோம்’ என்று இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களம் இறங்கியது.
“ஈரானில் உள்ள மூன்று முதன்மையான அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளோம்,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். மூன்று நிலையங்களும் செயலிழந்ததாக அவர் தெரிவித்தார். இஸ்ரேலின் நீண்ட கால எதிரியான ஈரானுக்கு ஆதரவாக இருந்து வரும் ரஷ்யா, சீனா, துருக்கி போன்ற நாடுகள் அமெரிக்காவை பலமாக கண்டித்துள்ளன.
இந்நிலையில், ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானில் ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இஸ்ரேல் அரசின் பாதுகாப்பை உறுதி செய்ய, தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.