விண்கலத்தில் இருந்து வணக்கம் சொன்ன சுபான்ஷு சுக்லா
1 min read
Subhanshu Shukla said hello from the spacecraft
26.6.2025
விண்வெளியில் எப்படி நடப்பது, சாப்பிடுவது என்பதை கற்று வருகிறேன் என்று சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லை எட்டிப்பிடிக்கும் முயற்சியில் உள்ளது. வருகிற 2027-ம் ஆண்டில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது.அவர்களுக்காக சிறப்பு பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது.
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தின் முன்னோட்டமாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு இந்திய வீரரை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது. அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்த இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலைய ஆராய்ச்சி குழுவுடன் செல்ல இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லாவை தேர்வு செய்தது.
இதன்படி, நேற்று இந்திய நேரப்படி பகல் 12.01 மணிக்கு ஏவப்பட்ட பால்கன்-9 ராக்கெட் மூலம் சுபான்சு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையம் புறப்பட்டார். அவருடன் மேலும் 3 விண்வெளி வீரர்களும் சென்றனர்.
இந்த நிலையில் விண்கலத்தில் இருந்தபடி, சுபான்சு சுக்லா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: –
வணக்கம்! மிகப்பெருமையாக உணர்கிறேன். மிகச்சிறிய அடிகள் மூலம் மிகப்பெரிய இலக்கை அடைய போகிறோம். ஒவ்வொரு இந்தியரும் என் இதயத்தில் இருக்கிறார்கள். எனது அனுபவங்களை பகிர ஆர்வத்துடன் உள்ளேன். ஒரு குழந்தையை போல உணர்கிறேன். விண்வெளியில் எப்படி நடப்பது, சாப்பிடுவது என்பதை கற்று வருகிறேன்”
இவ்வாறு அவர் கூறினார்.