நாளை குரூப்-4 தேர்வு: வினாத்தாள் தனியார் பஸ்சில் ‘சீல்’ வைத்து அனுப்பி வைப்பு
1 min read
Group 4 exam tomorrow: Question papers sent safely in a sealed bus
11.7.2025
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நாளை (12-ந் தேதி) தமிழகம் முழுவதும் குரூப்-4 தேர்வு நடைபெறவுள்ளது. காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறவுள்ள இந்த தேர்வில் கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் போன்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். இதையொட்டி தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றன. இந்த முறை வினாத்தாள்கள் தனியார் பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்.
முன்னதாக அதிகாரிகள் தனியார் பஸ்சின் கதவுகளுக்கு சீல் வைத்த சம்பவம் விநோதமாக இருந்தது. வழக்கமாக அரசு தேர்வின்போது வினாத்தாள்கள் கண்டெய்னர் போன்ற மூடப்பட்ட வாகனங்களில் எடுத்து செல்லப்படும். ஆனால் இந்த முறை தனியார் பேருந்துகளில் வினாத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வின்போது வாகனங்களில் பணியில் இருந்த காவல்துறையினர் மூலமாக வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனியார் பஸ்களின் கதவு மற்றும் அவசர வழி கதவுகளுக்கு ஏ4 பேப்பர் சீட் ஒட்டி சீல்வைத்து பாதுகாப்பு என கூறி வினாத்தாள்கள் அனுப்பி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.