Shocking sexual assault of a minor girl - new photo of the perpetrator released 19.7.2025 கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 12-ந்தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற 8 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் பின் தொடர்ந்து அவரை தூக்கி சென்று அருகே உள்ள மாந்தோப்பில் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தற்போது சென்னையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர். 8 நாட்களாகியும் இதுவரை அந்த நபரை கைது செய்யவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
போலீசார் ஒவ்வொரு நாள் வரும்போதும் 2 நாட்கள் கால அவகாசம் கேட்பதாகவும், இதுவரையில் அந்த நபரை கைது செய்யப்படவில்லை எனவும் புகார் தெரிவித்தனர். கைது நடவடிக்கை காலதாமதமானால் போராட்டம் தொடரும் என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சியினரும் கையில் எடுத்து உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசாமியை பிடிக்க போலீசார் 8 தனிப்படை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்ந்லையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளியை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் தற்போது புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.