ஊட்டியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் மீது குண்டர் சட்டம்
1 min read
21 female students sexually harassed in Ooty; Teacher booked under Goonda Act
26.7.2025
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 50). இவர் 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக பல்வேறு அரசு பள்ளிகளில் பணியாற்றி உள்ளார். இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியில் சேர்ந்தார். இவர் அந்தப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுத்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த அரசு பள்ளிக்கு பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் சென்றனர். அப்போது உடலில் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து மாணவ- மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது பள்ளியில் இருந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார்.
அதையடுத்து நடததப்பட்ட விசாரணையின் முடிவில் பள்ளியில் படித்த 21 மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் ஊட்டி ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.
இந்த நிலையில் செந்தில்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டார். இந்த நிலையில் ஊட்டி கிளை சிறையில் இருந்த செந்தில்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.