ஜார்க்கண்ட் என்கவுன்டரில் 3 நக்சலைட்டுகள் சாவு
1 min read
3 Naxalites killed in Jharkhand encounter
26.7.2025
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் ஹஹ்ரா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று காலை வனப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள், திடீரென போலீசார் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே நடந்த மோதலில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், என்கவுன்டர் நடந்த பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், வனப்பகுதியில் மேலும் சில நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.