அஜித் குமார் கொலை வழக்கு; தாய், தம்பியிடம் சிபிஐ விசாரணை
1 min read
Ajith Kumar murder case; CBI questions mother, brother
28.7.2025
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவில் காவலாளி அஜித்குமாரை, நகை திருடியதாக அளிக்கப்பட்ட புகாரில் அழைத்து சென்ற தனிப்படை போலீசார், விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்ததில், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாகிய நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தனிப்படை காவலர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அதே போல் அஜித்குமார் குடும்பத்தினரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்டதோடு, உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
விசாரணை அறிக்கையை சிபிஐ அதிகாரிகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ தரப்பில் விசாரணை அதிகாரியாக டெல்லியைச் சேர்ந்த மோகித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து, சிபிஐ சிறப்பு குற்றப்பிரிவு டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடந்த 14-ம் தேதி விசாரணை துவங்கிய நிலையில், மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் அவரது தாய், தம்பியை மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு இன்று இருவரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறது. 7 பேர் கொண்ட 2 குழு, இருவரையும் வாகனத்தில் சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்து சென்றது. 15-வது நாள் விசாரணையை அஜித்குமார் வீட்டில் தொடங்கியுள்ளது சிபிஐ.