தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதியாக ஸ்ரீஹரி பொறுப்பேற்பு
1 min read
Lieutenant General V. Srihari takes charge as the new Army Commander for the Southern Regions
31.7.2025
இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களையும், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களையும் கொண்டதாகும். இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை பொறுப்பேற்கிறார்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் வி ஸ்ரீஹரி 1987-ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட 16 சீக்கிய இலகு காலாட்படை பட்டாலியனில் நியமிக்கப்பட்டார். இப்படைப்பிரிவு பின்னர் ஆகஸ்ட் 1992-ல் பாரா ரெஜிமென்ட்டாக மாற்றப்பட்டது.
அவர் ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளிலும், பயிற்றுவிக்கும் அமைப்புகளிலும் இதற்கு முன்பு பணியாற்றியுள்ளார். நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும், வெளிநாட்டில் ஐ.நா. மிஷனிலும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.
லெப்டினன்ட் ஜெனரல் வி ஸ்ரீஹரி, 31 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் (கமாண்டோ) பிரிவில் பணியாற்றியபோது 1998-ம் ஆண்டு சௌர்ய சக்ரா விருதும், 2021-ம் ஆண்டு தனது பிரிவின் கட்டளைக்காக சேனா பதக்கம் (சிறப்புமிக்க சேவைகள்) மற்றும் 2023-ம் ஆண்டு அதி விஷிஷ்ட் சேவா பதக்கமும் பெற்றுள்ளார். 2009-ம் ஆண்டு ஒருங்கிணைந்த பணியாளர் குழுவின் பாராட்டு அட்டை மற்றும் 2013-ம் ஆண்டு ராணுவத் தலைமைத் தளபதி பாராட்டு அட்டையையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.