எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைப்பு
1 min read
Both Houses of Parliament adjourned due to opposition unrest
7.8.2025
பீகார் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வந்தது. 2003-ம் ஆண்டுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள் தங்களது இந்திய குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
தேர்தல் கமிஷன் உத்தரவை ரத்து செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் நிலுவையில் உள்ளன. மேலும், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் நடத்தக்கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாள்தோறும் அமளியில் ஈடுபட்டு, சபைகளை முடக்கி வருகிறார்கள்.
இன்று மீண்டும் நாடாளுமன்றம் துவங்கியநிலையில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். உறுப்பினர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் தொடர்ந்து வலியுறுத்தினார். எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், முதலில் அவையை 12 மணி வரை ஒத்திவைத்தார். அவை 12 மணிக்குக் கூடியதும் மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.