துணை ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
1 min read
Vice Presidential Election: C.P. Radhakrishnan files nomination in presence of Prime Minister Modi
20.8.2025
இந்திய துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக கோவையைச் சேர்ந்த மராட்டிய மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, சி.பி.ராதாகிருஷ்ணனை கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, கிரண் ரிஜிஜூ, எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி, கூட்டணி கட்சி உறுப்பினர்களுக்கு சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்து பேசும்போது, “சி.பி.ராதாகிருஷ்ணன் பண்பானவர், பணிவானவர். எந்த சர்ச்சைக்கும் ஆளாகாதவர். ஊழல்கறை இல்லாதவர். எளிமையான வாழ்க்கை வாழ்கிறவர். எனவே அவரை அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
மேலும் அவருக்கு ஆதரவு வழங்கக்கோரி பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அனைவரிடமும் பேசி வருவதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அனைவரும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி பி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலின்போது, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதல்-மந்திரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.