பிரதமர் மோடியின் தமிழக வருகை ரத்து
1 min read
Prime Minister Modi’s visit to Tamil Nadu cancelled
22.8.2025
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனையடுத்து, திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகள் அதற்கான அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில், கடந்த மாதம் 26-ம் தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நடந்த விழாவில், ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை, முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ.1,000 மதிப்பிலான, பேரரசர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார்.
இதையடுத்து, வருகிற 26-ந்தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு வர உள்ளார் என்று கூறப்பட்டது. சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்லும் பிரதமர் அங்கு சாமி தரிசனம் செய்வார் என்று தகவல் வெளியானது. தரிசனத்தை முடித்துவிட்டு நடராஜர் கோவிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நேரலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், 26-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவிருந்த நிலையில் அவரது சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாற்றுப் பணி மற்றும் முக்கிய அலுவல்கள் காரணமாக இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் வர பிரதமர் மோடி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.