பரமக்குடி அருகே கார் மீது மினி லாரி மோதல் – 4 பேர் பலி
1 min read
Mini lorry collides with car near Paramakudi – 4 dead
31.8.2025
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் செட்டியார் தெருவைச் சேர்ந்த பிச்சை மகன் கோவிந்தராஜ் தனது குடும்பத்துடன் வாடகை காரில் குற்றாலம் சென்றனர்.காரை மணக்குடியை சேர்ந்த ஓட்டுநர் காளீஸ்வரன் ஓட்டி வந்துள்ளார். இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் பரமக்குடி அருகே நெம்மேனி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்தபோது, மதுரையில் வீட்டை காலிசெய்து பொருட்களை ராமநாதபுரத்திற்கு வந்த மினி லாரி கார் மீது நேருக்குநேர் மோதியது.
இதில் காரில் பயணம் செய்த கோவிந்தராஜனின் மனைவி யமுனா(வயது 55), மகள் ஜமுனா(வயது 30), கார் ஓட்டுநர் மணக்குடி மாரி மகன் காளீஸ்வரன் (வயது 28) ஆகிய 3 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.இவர்களது உடல்கள் பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப் பட்டுள்ளது.
மேலும் இவ்விபத்தில் கோவிந்தராஜன்(வயது 65), இவரது மகன் சரண்ராஜ்(வயது 30),மினி லாரியில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த பாஸ்கரன் மகன் நாகநாதன் (வயது 47),இவரது மனைவி ஜெயமாலா (வயது 44 ) ஆகிய 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.மதுரை செல்லும் வழியில் கோவிந்தராஜன் (வயது 65) பரிதாபமாக இறந்தார்.இவரது உடல் மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப் பட்டுள்ளது.
இவ்விபத்து குறித்து பரமக்குடி தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
-குணாளன், பரமக்குடி