ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை
1 min read
Liquor sales worth Rs. 826 crore in Kerala during Onam festival
6.9.2025
கேரளாவில் ஓணம் பண்டிகை நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 10 நாட்கள் ஓணம் விழா நடந்தது. மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 நாட்களில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை ஆனது. கடந்த ஆண்டு ரூ.776 கோடிக்கு மது விற்பனை நடந்தது. இதை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.50 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
உத்திராட நாளில் (அதாவயது ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள்) மட்டும் ரூ.137 கோடிக்கு மது விற்பனையானது. கடந்த ஆண்டு அதே நாளில் ரூ.126 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. இதை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.11 கோடி மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழக்கிழமை 6 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் ரூ.1 கோடி மற்றும் அதற்கு கூடுதலாக மதுபானங்கள் விற்பனையானது. இதில் 3 சில்லறை விற்பனை கடைகள் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது.
கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளி பகுதியில் உள்ள அரசின் சில்லறை விற்பனை கடையில் ரூ.1.46 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. இது மாநிலத்திலேயே அதிக அளவு விற்பனையான கடை ஆகும். அதற்கு அடுத்தபடியாக கொல்லம் அருகே உள்ள காவநாடு சில்லறை விற்பனை கடையில் ரூ.1.24 கோடிக்கும், மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னாவில் உள்ள எடப்பால் குற்றிப்பாலா சில்லறை மதுபான விற்பனை கடையில் ரூ.1.11 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
திருச்சூர் மாவட்டம் சாலக்குடி மதுபான சில்லறை விற்பனை கடையில் ரூ.1.07 கோடிக்கும், இரிஞ்சாலகுடா மதுபான கடையில் ரூ.1.03 கோடிக்கும், கொல்லம் மாவட்டம் குண்டராவில் உள்ள மதுபான கடையில் ரூ.1 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது என்று கேரள அரசின் மதுபான விற்பனை கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.