துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக பிஜு ஜனதா தளம் கட்சி அறிவிப்பு
1 min read
Biju Janata Dal party announces boycott of Vice Presidential election
8.9.2025
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது. பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.
கடந்த மாதம் அவர்கள் இருவரும் துணை ஜனாதிபதி பதவிக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த னர். அதன் பிறகு அவர்கள் இருவரும் பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.
பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை பெறும் வகையில் எம்.பி.க்கள் பலம் இல்லை. எனவே நாளை நடக்கும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக பிஜு ஜனதா தளம் கட்சி அறிவித்துளளது.
பிஜு ஜனதா தளம் கட்சி மாநிலங்களவையில் 7 எம்.பி.க்களை கொண்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிகளிடம் இருந்து சம தூரத்தில் தாங்கள் இருப்பதாகவும், ஒடிசாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே தங்களுக்கு முக்கியம் எனவும் அக்கட்சியின் எம்.பி. சஸ்மித் பத்ரா தெரிவித்தார்.