June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

ஊரக வேலை திட்டத்தில் திமுக அரசின் மோசடி – அன்புமணி கண்டனம்

1 min read

Anbumani condemns DMK government’s fraud in rural employment scheme

12.9.2025
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இதுவரை வெறும் 9 நாள்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு மிகக்குறைந்த நிதியை மட்டுமே வழங்கியுள்ள நிலையில், அதை எதிர்க்கவும், கூடுதல் நிதி பெற எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தொழிலாளர்களை தமிழக அரசு சுரண்டி வருவது கண்டிக்கத்தக்கது.

கிராமப்புற பொருளாதரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் பணியாற்ற பதிவு செய்துள்ள குடும்பங்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 100 நாள்கள் வரை வேலை வழங்க முடியும்.

ஆனால், இந்தத் திட்டத்தின்படி தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் இதுவரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 9.27 நாள்கள் மட்டும் தான் வேலை வழங்கப்பட்டுள்ளது. ஊரக வேலைஉறுதித் திட்டத்தின்கீழ் வேலை கோரி தமிழ்நாட்டில் 85.70 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்திருக்கின்றன. அவர்களில் 74.95 லட்சம் குடும்பங்கள் தொடர்ந்து பணி செய்து வருகின்றன. எனினும், அவர்களில் 30.30 லட்சம் குடும்பங்களுக்கு நடப்பு நிதியாண்டில் ஒரு நாள் கூட வேலை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநிலை தொடர்ந்தால், நடப்பாண்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 20.61 நாள்கள் மட்டுமே வேலை வழங்க முடியும். ஆட்சிக்கு வந்தால் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 150 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதில் ஏழில் ஒரு பங்குக்கும் குறைவாகவே வேலை வழங்குகிறது. இது கடந்த அதிமுக ஆட்சியின் கடைசி ஆண்டில் வழங்கப்பட்ட 50 நாள் வேலையை விட 60 சதவீதம் குறைவு ஆகும். கடந்த 2023 & 24ஆம் ஆண்டில் 4 லட்சம் குடும்பங்களுக்கு 100 நாள்கள் வேலை வழங்கப்பட்ட நிலையில், அது கடந்த ஆண்டில் 1.18 லட்சம் குடும்பங்களாக குறைந்து விட்டது. நடப்பாண்டில் நிலைமை மேலும் மோசமடைந்து இதுவரை வெறும் 346 குடும்பங்களுக்கு மட்டும் தான் 100 நாள்கள் முழுமையாக வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இதேநிலை நீடித்தால் ஆண்டின் இறுதியில் 1000 குடும்பங்களுக்குக் கூட 100 நாள் வேலை வழங்க முடியாது. அதுமட்டுமின்றி, சராசரி ஊதியத்தின் அளவும் கடந்த ஆண்டை விட ரூ.15 குறைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இத்தகைய நிலை ஏற்பட்டதற்கு காரணம் திமுக அரசின் அலட்சியமும், துரோகமும் தான். ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு 12 கோடி மனித வேலை நாள்கள் மட்டும் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்டதை விட மிகவும் குறைவு ஆகும். 2020&21 ஆண்டில் 33.39 கோடி, 2021&22ஆம் ஆண்டில் 34.57 கோடி, 2022&23ஆம் ஆண்டில் 33.46 கோடி, 2023&24ஆம் ஆண்டில் 40.87 கோடி, 2024&25ஆம் ஆண்டில் 30.61 கோடி மனித நாள்கள் வேலை வழங்கப்பட்ட நிலையில், அவற்றில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு தான் இந்த முறை தமிழகத்திற்கு வேலை நாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது போதுமானதல்ல; இதை ஏற்க முடியாது.

ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திட்டம் அல்ல. மனிதத் தேவைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டம் ஆகும். கடந்த காலங்களில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை விட கூடுதல் தொகைக்கு வேலை வழங்கி விட்டு, அதை மத்திய அரசிடமிருந்து பெற்ற வரலாறு உள்ளது. அதே நிலையை இப்போது எடுக்காவிட்டால், மத்திய அரசிடம் இருந்து தமிழகம் பெற வேண்டிய தொகையில் ரூ.10,000 கோடி வரை இழக்க வேண்டியிருக்கும். மாநில அரசின் உரிமைகளுக்காக போராடுவதாகக் கூறும் திமுக இந்த சிக்கலில் அமைதி காப்பது ஏன்?

-நடப்பாண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 74.75 லட்சம் குடும்பங்களுக்கும் சராசரியாக 50 நாள்களாவது வேலை வழங்கும் வகையில் 43 கோடி மனித வேலை நாள்களை பெறவும், அதற்காக ஆகும் ரூ.18,106 கோடி செலவில் மத்திய அரசின் பங்காக ரூ.16,296 கோடியை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *