June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

1231 செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை

1 min read

Chief Minister M.K. Stalin issued appointment orders for 1231 nursing posts

22.9.2025
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.9.2025) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.

தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 5000 மக்கள் தொகைக்கு 1 துணை சுகாதார நிலையம் மற்றும் நகர்புறங்களில் 10,000 மக்கள் தொகைக்கு 1 துணை சுகாதார நிலையம் என்ற அடிப்படையில் இயங்கி வருகின்றது. 2025-ஆம் ஆண்டில் மக்கள் தொகைக்கேற்ப மேலும் 642 துணை சுகாதார நிலையங்கள், கிராமம் மற்றும் நகர்புறத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு தற்போது கிராமப்புறங்களில் 8713 துணை சுகாதார நிலையங்களும், நகர்புறங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட்ட 2368 துணை சுகாதார நிலையங்களும் இயங்கி வருகிறது.

கிராமப்புற சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்களும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை செவிலியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.

கிராம சுகாதார செவிலியர்கள் – தாய் சேய் நலப் பணி, தடுப்பூசி பணி, குடும்ப நல திட்டப் பணிகள், கருத்தடையை ஊக்குவித்தல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், வளர் இனம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்குதல், ரத்தசோகை தடுப்பு மாத்திரை வழங்தல், பள்ளி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, கிராமபுறங்களில் சிறுசிறு நோய்களான வயிற்றுப்போக்கு, சுவாச தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளித்தல், குடும்ப பதிவேடு பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வர்.

துணை செவிலியர்கள்- ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல், பிரசவம் பார்த்தல், தடுப்பூசி பணிகள், தாய் சேய் நல பரிசோதனை, குழந்தைகளுக்கான சிறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும் முதலுதவி அளித்தல், ரத்த அழுத்த பரிசோதனை போன்ற பணிகளை மேற்கொள்வர்.

உச்சநீதிமன்ற வழக்கில் தடையாணை காரணமாக துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருந்த கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் துணை செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொள்ளும் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் துணை செவிலியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்பிட அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்பொழுது உச்சநீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதலின்படி, அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் 25.07.2023 முன்னர் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 1231 மாணவர்களுக்கு வெளிப்படையான முறையில் மாவட்டங்களில் இருந்த காலிப்பணியிடங்களை தேர்வு செய்யும் வகையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், மீதமுள்ள 2417 காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், நர்சுகள் பொதுநல சங்கம், தமிழ்நாடு அரசு கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியர் சங்கம் ஆகிய சங்கங்களின் சார்பில் அதன் நிர்வாகிகள் சந்தித்து, கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கியமைக்காக தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ப. செந்தில்குமார், தேசிய நல வாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் எ. சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் சித்ரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *