சென்னை அருகே கன்டெய்னர் லாரி மோதி போக்குவரத்து போலீஸ்காரர் பலி
1 min read
Traffic policeman killed after being hit by container lorry near Chennai
22.9.2025
சென்னையை அடுத்த மாதவரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவிக்குமார்(வயது 50). இவர், மாதவரம் போக்குவரத்து போலீசில் காவலராக வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு ரவிக்குமார் வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். இதற்காக மோட்டார்சைக்கிளில் ரெட்டை ஏரியில் இருந்து மாதவரம் நோக்கி 200 அடி சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது செங்குன்றத்தில் இருந்து துறைமுகம் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர் ரவிக்குமாரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரவிக்குமார் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரி டிரைவரான பீகார் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் ஷா(51) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.