களக்காடு: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
1 min read
Kalakkadu: Attempted murder case convict gets 7 years in prison
24.9.2025
கடந்த 2022-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, தோப்பூரை சேர்ந்த ஜெயசீலன் (வயது 38) என்பவர், முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை தாக்கி கொலை முயற்சி செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான வழக்கு, நாங்குநேரி சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி ராமதாஸ் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் ஜெயசீலனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜட்சன் (தற்போது திருநெல்வேலி மாநகர உதவி போலீஸ் கமிஷனர்), சாட்சியங்களை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், களக்காடு காவலர்கள், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஜேம்ஸ்பால் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
2025-ம் ஆண்டில் இதுவரை 11 கொலை முயற்சி வழக்குகளில், சம்பந்தப்பட்ட 15 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் 1 குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 7 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் 2 குற்றவாளிகள் சரித்திர பதிவேடு உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.