உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது – ஐ.நா. பொது சபையில் ஜெய்சங்கர் பேச்சு
1 min read
Pakistan is the epicenter of global terrorism – Jaishankar’s speech at the UN General Assembly
29.9.2025
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் 80-வது அமர்வு பொதுவிவாதம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பேசி வருகிறார்.
இதில் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பேசினார். அவர் பேசியதாவது:-
சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா பயங்கரவாதத்தின் சவாலை எதிர்கொண்டு உள்ளது. உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக எங்கள் அண்டை நாடு உள்ளது.
பல தசாப்தங்களாக, முக்கிய சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்கள் அந்த ஒரு நாட்டில் இருந்து தான் வருகின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மிகச் சமீபத்திய உதாரணம் கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டது ஆகும்.
பயங்கரவாதத்திற்கு எதிராக தனது மக்களைப் பாதுகாக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தியது. மேலும் பயங்கரவாத தாக்குதல் அமைப்பாளர்களையும் குற்றவாளிகளையும் நீதியின் முன் நிறுத்தியது.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நமது உரிமைகளை வலியுறுத்தும் அதே வேளையில், அச்சுறுத்தல்களையும் நாம் உறுதியாக எதிர்கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்ப்பது ஒரு முன்னுரிமை ஆகும்.
ஏனென்றால் அது வெறி, வன்முறை, சகிப்புத்தன்மை மற்றும் பயத்தை ஒருங்கிணைக்கிறது. பயங்கரவாதத்தை நாடுகள் வெளிப் படையாக அரசுக் கொள்கையாக அறிவிக்கும்போது, பயங்கரவாதிகள் பகிரங்கமாக மகிமைப்படுத்தப்படும்போது, அத்தகைய நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது தடுக்கப்பட வேண்டும்.
பயங்கரவாதிகள் மீதும், அவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் மீதும் இடைவிடாத அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். அமைதியை மீட்டெடுக்க உதவும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா ஆதரிக்கும்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நமது மக்களைப் பாதுகாக்கவும் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
நமது எல்லைகளை வலுவாகப் பாதுகாத்தல், அதற்கு அப்பால் வெளிநாடுகளுடன் உறவை வலுப்படுத்துவது அங்கு வசிக்கும் நமது சமூகத்திற்கு உதவியாக இருக்கும்.
ஐ.நா. கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிகள் இரண்டும் விரிவுபடுத்தப்பட வேண்டும். சீர்திருத்தப்பட்ட கவுன்சில் உண்மையிலேயே பிரதிநிதித்துவப் படுத்தப்பட வேண்டும். இந்தியா அதிக பொறுப்புகளை ஏற்கத் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.