June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்துக்கு தடை

1 min read

‘Coldrip’ cough medicine banned in Tamil Nadu

3.10.2025
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதற்கு காரணம் என்பது தெரியவந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட் ரிப்’ மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இரு வேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது. அந்தக் குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைசால் எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்ததாக அறிக்கை வெளியானது.

பெயிண்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் அந்த ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல் துறை விசாரணைக் குழுவை மத்திய அரசும், மத்திய பிரதேச அரசுகளும் அமைத்துள்ளன. இதனிடையே, மத்திய பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ் குமார் மவுரியா, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், காஞ்சிபுரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பார்மாவில் தயாரிக்கப்பட்ட (13 பேட்ச்) ‘கோல்ட்ரிஃப்’ மருந்தை சோதனைக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளுமாறும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் எஸ்.குரு பாரதி தலைமையிலான குழுவினர், கடந்த இரு நாள்களாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அங்கிருந்து அதே பேட்ச்சில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட் ரிப்’ உள்பட 5 மருந்துகளை ஆய்வுக்காக எடுத்து வந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் அதன் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு ‘கோல்ட் ரிப்’ மருந்து விநியோகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இது தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டு உள்ளன. மற்றொரு மருந்தான நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து தமிழகத்தில் ஏற்கெனவே விற்பனையில் இல்லை என எஸ்.குருபாரதி தெரிவித்து உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *