இருமல் மருந்தால் 20 குழந்தைகள் பலி: மத்திய அரசிடம் விளக்கம் கேட்ட உலக சுகாதார அமைப்பு
1 min read
20 children die from cough medicine: World Health Organization seeks explanation from central government
9.10.2025
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசமடைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் மட்டும் நேற்றுவரை 20 குழந்தைகள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இறப்புகளுக்குக் காரணமான சிரப் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
இருமல் மருந்தில் பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவில் டைதிலீன் கிளைகோல் (DEG) என்ற நச்சு இரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதே இரசாயனம் ரெஸ்பிஃப்ரெஷ் மற்றும் ரீலைஃப் சிரப்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருந்தை அடர்த்தியானதாக மாற்றவும் இனிப்புச் சுவைக்காகவும் பயன்படுத்தக் கூடியதாகும்.
தற்போது கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் மத்திய பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருந்து உற்பத்தியில் இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் பல்வேறு நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்து வருகிறது.
அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் பொதுவான மருந்துகளில் 40% இந்தியாவிலிருந்து செல்கிறது. மேலும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கான மருந்துகளில் 90% இந்தியாவிலிருந்து செல்கின்றன.
இதனிடையே, இந்தியாவில் இருந்து நச்சுத்தன்மையுள்ள இருமல் மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா? என மத்திய அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, இந்தியாவில் 3 இருமல் மருந்துகளில் நச்சு கலப்படம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. கோல்ட்ரிஃப் மருந்து வெளிநாடுகளுக்கு எதுவும் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டு உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன், இந்தியாவில் இவ்வகை மருந்துகள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியை ஒருங்குமுறைபடுத்துவதில் மிகுந்த இடைவெளி நீடிப்பதாக சுட்டிக்காட்டி உள்ளது.