August 30, 2026

Seithi Saral

Tamil News Channel

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

1 min read

Karur stampede: Supreme Court orders CBI probe

13.10.2025
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசல் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ரோடு ஷோ’வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதேபோல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவன் பிருத்திக்கின் தந்தை பன்னீர்செல்வம், பாத்திமாபானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோரும் சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கக்கோரியும் பாஜக மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுக்கள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ நடத்தும் விசாரணையை கண்காணிக்க ஒரு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படும். அந்த குழுவுக்கு ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை தாங்குவார். அந்த குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். இந்த சிறப்பு விசாரணைக்குக்குழு , சிபிஐ மேற்கொள்ளும் விசாரணையை தொடர்ந்து கண்காணிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ கோரிய மனுத் தாக்கலில் மிகப்பெரிய மோசடியை உச்ச நீதிமன்ற கருத்தில் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் முறையிடப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் சம்பவம் குறித்து மோசடியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது, உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனை கருத்தில் கொள்வோம் என நீதிபதி அமர்வு தெரிவித்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *