கிர்கிஸ்தான் சென்ற பிரதமர் மோடிக்கு கலாசார நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு
1 min read
Prime Minister Modi receives an enthusiastic welcome with cultural performances upon his arrival in Kyrgyzstan
31.8.2026
கிர்கிஸ்தான் சென்ற பிரதமர் மோடிக்கு கலாசார, பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் முதலில் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அவரை அந்நாட்டு ஜனாதிபதி ஷாவ்கத் மிர்ஜியோயேவ் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.
உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர், கதக் மற்றும் போல்கா நடன நிகழ்ச்சிகள் நடத்தியும், உஸ்பெகிஸ்தானின் பாரம்பரிய தொய்ரா மற்றும் சாங் இசை கருவிகளை கொண்டு இசையமைத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், தாஷ்கன்டில் இந்திய வம்சாவளியினர் அளித்த உற்சாக வரவேற்பு மற்றும் அன்பால் மகிழ்ந்து போனேன். இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே, நம்முடைய இந்திய வம்சாவளியினர் ஒரு வாழும் பாலம் போன்று இருப்பதுடன், இரு நாடுகளிடையேயான நட்புறவுக்கான பிணைப்பை வலுப்படுத்தி வருகின்றனர் என தெரிவித்து உள்ளார்.
இந்த பயணத்தில், இரு நாடுகள் இடையேயான நட்புறவை இன்னும் வலுப்படுத்துவதற்காக, அந்நாட்டு ஜனாதிபதி மிர்ஜியோயேவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் இணைப்பு, பாதுகாப்பு, எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்குப்பின் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், கனிமங்கள், சுகாதாரம் உள்பட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன.
இந்த பயணத்தில், பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய, ஒலிய தராஜலி தோ’ஸ்த்லிக்’ விருது வழங்கப்பட்டது. அதனை உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கத் மிர்ஸியோயேவ் வழங்கினார்.
உஸ்பெகிஸ்தான் பயணம் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி கிர்கிஸ்தான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அவரை மனாஸ் சர்வதேச விமான நிலையத்தில், அந்நாட்டின் மந்திரி சபைகளின் தலைவர் அடில்பெக் கஸிமலியேவ் வரவேற்றார். பிரதமர் மோடிக்கு கிர்கிஸ்தானில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பாரம்பரிய நடனங்களை ஆடியும், கலாசார நிகழ்ச்சிகளை நடத்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அந்நாட்டின் பிஷ்கேக் நகரில் நடைபெறும் 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தில் கிர்கிஸ்தான் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிற உறுப்பு நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார்.