கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலி
1 min read
Another woman dies of amoebic meningitis in Kerala
கேரள மாநிலத்தில் கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் அமீபா மூளைக்காய்ச்சல் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த காய்ச்சல் பாதித்து கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி பகுதியை சோ்ந்த 9 வயது சிறுமி, 3 மாத குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்தநிலையில் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த 48 வயது பெண் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கடும் காய்ச்சல், உடல் வலியால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இருப்பினும், உடல்நலம் சரியாகாததால் கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பெண்ணின் உடலில் இருந்து மாதிரி சேகரித்து பரிசோதனை செய்ததில், அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்து இருப்பது உறுதியானது. பின்னர் அந்த பெண் சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி பெண் சனி இரவு இறந்தார். இதன் மூலம் அமீபா மூளைக்காய்ச்சலுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.
இதையடுத்து பெண் வீட்டில் உள்ள கிணறு, அருகே உள்ள குளம் போன்ற நீர்நிலைகளில் இருந்து மாதிரி சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்து 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.