ரிதன்யாவின் செல்போன்களை ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
High Court orders examination of Rithanya’s cell phones
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அடுத்த கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள் ரிதன்யா(27). இவா் திருமணமாகி 78-வது நாளில் வரதட்சணைக் கொடுமையால் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ரிதன்யா தற்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கணவா் கவின்குமாா், மாமனாா் ஈஸ்வரமூா்த்தி, மாமியாா் சித்ரா தேவி ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதான மூவரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, கவின்குமாா், ஈஸ்வரமூா்த்தி மற்றும் சித்ரா தேவி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி மூவரும் காலை, மாலை போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி அவரது தந்தை அண்ணாதுரை சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதில் எந்த பலனும் இல்லை என ஐகோர்ட்டு தெரிவித்தது.
இந்த நிலையில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஜாமின் பெற்று வீடு திரும்பியபோது வீட்டில் ரிதன்யாவின் 2 செல்போன்களை கண்டெடுத்ததாகவும், அந்த செல்போன்களை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ரிதன்யாவின் 2 செல்போன்களை ஆய்வு செய்ய காவல்துறையினர் மறுத்துவிட்டதாகவும், திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என ரிதன்யா தனது தோழிகளிடம் பேசிய ஆடியோ ஆதாரங்கள் அந்த செல்போன்களில் இருப்பதாகவும் கவின்குமார் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு காவல்துறை தரப்பில், ரிதன்யாவின் செல்போன்களை புலன்விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தால் அவை ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ரிதன்யாவின் 2 செல்போன்களையும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.