டெல்லியில் 4 நாட்கள் பசுமை பட்டாசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
1 min read
Supreme Court allows 4 days of green firecracker celebrations in Delhi
டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கபட்டுள்ளது. டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டது.
மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடும் விதமாக தடையை தளர்த்தலாம் என மத்திய அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
டெல்லியில் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் அக்டோபர் 21 ஆம் தேதி வரை மட்டும் பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசுகளை விற்கவும் அனுமதி அளித்துள்ளது.
பசுமை பட்டாசுகள் தயாரிப்பை கண்காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும் என்றும் டெல்லியில் மாலை 6 – இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் டெல்லி மக்களும், பட்டாசு விற்பனையாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.