நேபாளத்திற்கு மேலும் ஒரு பேரழிவு எச்சரிக்கை
1 min read
Another disaster warning for Nepal
28.8.2026
நேபாளத்தை ஒட்டிய திபெத் பகுதியில் அணை உடைந்துவிட்டது, எனவே அங்கு மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நேபாளம் அறிவித்து இருக்கிறது.
நேபாளம் இதுவரை சந்தித்திராத பெருவெள்ளத்தை சந்தித்து இருக்கிறது. அங்கு ஆக.26ம் தேதி பனிப்பாறை உடைந்து ஆறுகளுக்கு இடையே ஏற்பட்ட பெரு வெள்ளம், கடும் சேதத்தையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.
பலி எண்ணிக்கையானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. நேபாள மக்கள் மட்டுமில்லாது, அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் பலரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதே சூழலில், நேபாளத்தை ஒட்டிய திபெத் பகுதியில் அணை உடைந்துவிட்டது, எனவே அங்கு மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நேபாள காவல்துறை அறிவித்து இருக்கிறது.
இது குறித்து அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
திபெத்தில் அணை உடைந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துளளது. ஆகையால் பாதுகாப்பு படையினர், நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள், மக்கள் என அனைத்து தரப்பினரும் விழிப்புடன் இருக்க வேண்டும். பாதுகாப்பான பகுதிகளுக்கு அனைவரும் செல்ல வேண்டும், இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு நேபாள காவல்துறை தமது அறிவிப்பில் குறிப்பிட்டு இருக்கிறது. இதேபோல் நேபாளத்தின் தேசிய பேரிடர் ஆணையமும் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது. போடே கோஷி. திரிசூலி, நாராயணி ஆறுகளினால் ஒரு பேரழிவு வெள்ளப்பெருக்கு ஏற்படலாம், எனவே கரைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட வேண்டும் என்று கூறி உள்ளது.