குற்றாலம் அருவியில் 10 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி
1 min read
Bathing allowed at Courtallam Falls after 10 days
குற்றாலம் அருவிகளில் தண்ணீர்வரத்து சீரான நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
குற்றாலத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் பலத்த மழையினால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதன்படி கடந்த 16ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்த பலத்த மழையினால் நாள்தோறும் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாகவே இருந்தது. இதனால் கடந்த பத்து நாட்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சற்று குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சீரான நிலையில் இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவி, புலியருவி, சிற்றருவி, ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பழைய குற்றாலம் அருவி பகுதியில் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்களை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் பழைய குற்றாலம் அருவியில் குளிக்க வனத்துறையினர் விதித்த தடை நீடித்து வருகிறது.எனவே மற்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். பழைய குற்றாலம் அருவியிலும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களை குளிக்க அனுமதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.