சங்கரன்கோவில் அருகே விஷம் வைத்து 50 மயில்களை கொன்ற விவசாயி கைது
1 min read
50 peacocks die after consuming poison near Sankarankovil
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாய நிலத்தில் வைத்த விஷத்தை தின்ற 50 மயில்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் கிராமத்தில் பாபு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை ஜான்சன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
இப்பகுதியில் மயில்களின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருவதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் விவசாயி ஜான்சன் தனது விவசாய தோட்டத்திற்குள் புகுந்து மயில்கள் பயிர்களை சேதப்படுத்தி வருவதை தடுப்பதற்காக மக்காச் சோளத்தில் விஷ மருந்தை கலந்து விவசாயம் செய்யக்கூடிய பகுதிகளில் வைத்துள்ளார்
இந்த நிலையில் இறை தேடி விவசாய நிலத்திற்குள் வந்த மயில்கள் உணவு என நினைத்து விஷம் கலந்த மக்காச்சோளத்தை அதிக அளவில் தின்றுள்ளது இதனால் 50 மயில்கள் விவசாய நிலத்திலேயே உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய பறவையான மயில்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வனச்சரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் உயிரிழந்த மயில்களை மீட்டு கால்நடை மருத்துவர்கள் நிதீஷ் குமார் சாந்தகுமார் மருத்துவர் நாகராஜன் அடங்கிய மருத்துவ குழுவினர் 50 மயில்களையும் உடற்கூறு ஆய்வு செய்து அதனை அப்பகுதியில் புதைத்தனர்.
மேலும் தேசிய பறவையான மயில்களை கொலை செய்யும் நோக்கத்தோடு விஷ மருந்தை கலந்து வைத்த விவசாயி ஜான்சன் என்பவரை வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர்
விசாரணையில் தனது தோட்டத்தில் விளைவிக்கும் பயிர்களை மயில்கள் தொடர்ந்து நாசம் செய்வதாகவும் அதனை தடுக்கும் நோக்கத்தில் கழுகுமலை பகுதியில் உள்ள மருந்து கடையில் வாங்கிய விஷத்தை மக்காச் சோளத்துடன் கலந்து வைத்ததாகவும் அதை தின்ற மயிலகள் உயிரிழந்ததாகவும் தெரியவந்தது.
உடனடியாக போலீசார் விவசாயி ஜான்சனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள் நீதிபதி அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தேசியப் பறவையான மயில்களை விஷம் வைத்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.