நாகை மீனவர்கள் 14 பேர் கைது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
1 min read
14 Naga fishermen arrested; Letter from Chief Minister M.K. Stalin
10/11/2025
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 14 தமிழக மீனவர்களை விடுக்ககோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் 9.11.2025 அன்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்குத் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்திய மீனவர்களும் அவர்களது மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. 2024- ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பல மீனவர்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீன்பிடித் தொழிலை முதன்மை வாழ்வாதாரமாக நம்பியுள்ள கடலோர சமூகங்களை ஆழமாகப் பாதித்துள்ளது. அவர்களின் குடும்பங்களுக்குக் கடுமையான துன்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் உயிர்ப்பித்திடவும், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீடித்தத் தீர்வை அடைந்திட ஒருங்கிணைந்த முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.