நெல்லையில் ஒரே மையத்தில் தந்தை-மகன் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வு
1 min read
Father-son teacher qualification exam written at the same center in Nellai
தமிழகம் முழுவதும் பட்டப்படிப்பும், தொடர்ந்து பி.எட். படிப்பை முடித்தவர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2-க்கான தேர்வும் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வு 35 மையங்களில் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில், பாளையங்கோட்டை சேவியர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட மையத்தில் தந்தையும், மகனும் ஒரே நேரத்தில் தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் உமர் பாரூக் (வயது 50). இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள அரசு நிதி உதவிபெறும் பள்ளியில் பட்டதாரி தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தகுதி தேர்வு கட்டாயமாக எழுத வேண்டும் என்பதால் உமர் பாரூக்கும் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார்.
அதே நேரத்தில் இவருடைய மகன் தானிஷ் (வயது 22) என்பவரும் பி.எட். படிப்பை முடித்துவிட்டு இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இருவருக்கும் பாளையங்கோட்டை சேவியர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் இருவரும் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று ஒரே நேரத்தில் அவர்கள் இருவரும் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.