June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கனமழை: குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை

1 min read

Heavy rain: Bathing prohibited at Courtallam Main Falls

18/11/2025
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில் சபரிமலை கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள், குற்றாலம் வந்து அருவிகளில் நீராடி விட்டு செல்வதால் குற்றாலம் அருவிகளில் கூட்டம் நிரம்பி காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் குற்றாலம் அருவிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அருவிக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

முன்னதாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *