மெட்ரோ ரெயில் விவகாரத்தில் முதல்-அமைச்சர் கவனம் செலுத்தவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு
1 min read
Annamalai alleges that the Chief Minister is not paying attention to the Metro Rail issue
கோவையில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரும் போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்திருக்கலாம். பிரதமர் தமிழகம் வரும்போதெல்லாம் முதல்வர் காரணம் சொல்கிறார். மெட்ரோ ரெயில் விவகாரத்தில் முதல்-அமைச்சர் கவனம் செலுத்தவில்லை. கோவை, மதுரைக்கு மெட்ரொ ரெயில் வரக்கூடாது என்ற எண்ணம்தான் முதல்-அமைச்சருக்கு உள்ளது.
தமிழகத்துக்கான நிதிப்பகிர்வு 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எந்த மாநில மெட்ரோவிற்கும் வழங்காத நிதியை சென்னை மெட்ரோவுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு நிதி வரவில்லை என கனிமொழி பேசுகிறார் என்று தெரியவில்லை.
நெல் மூட்டைகளை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் ரூ.360 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. ஈரப்பதம் இல்லாமல் நெல்லை காப்பாற்ற திமுக அரசு தவறிவிட்டது. பீகாரில் 6.4 சதவீத போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு விட்டனர். தமிழகத்திலும் அதிக போலி வாக்காளர்கள் உள்ளனர்.”
இவ்வாறு அவர் பேசினார்.