கடையநல்லூர் அருகே அருகே பஸ்கள் மோதியதில் 7 பேர் பலி
1 min read
6 killed in bus collision near Kadayanallur
.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நேருடுஞ்சாலையில் இன்று 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 34-பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்து பற்றிய தகவல் வருமாறு:-
தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இன்று காலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.
இதேபோல சங்கரன்கோவிலில் இருந்து தென்காசி நோக்கி ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்த 2 பஸ்களும் கடையநல்லூரை அடுத்த இடைகால் அருகே உள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
இந்த பயங்கர விபத்தில் பஸ்களின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. பஸ்களின் இடிபாடுகளுக்குள் சிக்கி அதில் இருந்த பயணிகள் படுகாயம் அடைந்து அலறித்துடித்தனர்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் சம்பவஇடத்திற்கு மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், டி.எஸ்.பி.க்கள் தமிழ் இனியன், மீனாட்சி நாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
மேலும் கடையநல்லூர், தென்காசியில் இருந்து தீயணைப்பு துறையினரும், ஆம்புலன்ஸ் குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் குழுவினரும், தன்னார்வலர்களும் வரவழைக்கப்பட்டனர்.
மேலும் ஜே.சி.பி. எந்திரங்களும் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து பஸ்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்தது.
இந்த கோர விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் பலியாயினர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் ஒருவர் இறந்ததால் உயிரிழப்பு 7 ஆக உயர்ந்தது.
தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கோர விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் மாற்றுப்பாதையில் வாக னங்களை திருப்பிவிட்டு போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து மீட்ப பணி நடைபெற்றது.
பஸ்கள் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.