எத்தியோப்பியாவில் வெடித்த எரிமலை: இந்திய நகரங்களை சூழ்ந்த சாம்பல்
1 min read
Volcano erupts in Ethiopia: Ash covers Indian cities
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா. இந்நாட்டின் அபார் மாகாணத்தில் ஹேலி குப்பி என்ற எரிமலை உள்ளது. எரித்திரியா நாட்டின் எல்லை அருகே இந்த எரிமலை அமைந்துள்ளது. இதனிடையே, ஹேலி குப்பி எரிமலை கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளாக எந்தவித வெடிப்பும் இன்றி அமைதியான இருந்து வந்தது.
இந்நிலையில், 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக ஹேலி குப்பி எரிமலை நேற்று வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருகிறது. எரிமலை வெடிப்பால் லாவா எரிமலை குழம்பும் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்துச்சிதறிய எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் வளிமண்டலத்தில் பரவி செங்கடல், ஏமன், ஓமன் வழியாக, சுமார் 4,000 கி.மீ. தூரம் நகர்ந்து இந்தியாவை நோக்கி மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றன
இந்த சாம்பல் குஜராத் மாநிலத்திற்குள் நுழைந்து ராஜஸ்தான், மேற்கு மகாராஷ்டிரா, டெல்லி, அரியானா, பஞ்சாப் நோக்கி நகரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி, ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் வான் பரப்பில் சாம்பல் படர்ந்ததால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மேகங்கள், எரிமலைச் சாம்பல், சல்பர் டை ஆக்சைடு மற்றும் சிறிய பாறைத் துகள்கள் ஆகியவற்றைக் கொண்டவை. இவை பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 முதல் 15 கி.மீ உயரம் வரை வளிமண்டலத்தில் பரவியுள்ளன. இந்த உயரத்தில் வணிக விமானங்கள் பறப்பதால், விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.