2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு .11,718 கோடி-ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல்!
1 min read
Cabinet approves allocation of Rs. 11,718 crore for 2027 Census!
13.12.2025
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக ரூ .11,718 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைஷ்ணவ், 2027 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு ரூ.11,718.24 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இது இந்தியாவில் நடத்தப்படும் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். சுதந்திரத்திற்குப் பிறகு எட்டாவது முறையாக எடுக்கப்படுகிறது. முதல் கட்டமான, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு ஏப்ரல் மற்றும் செப்டம்பர்க்கு இடையில் நடத்தப்படும். இரண்டாம் கட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்பு , பிப்ரவரி 2027 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு பகுதிகளான லடாக், ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் பகுதிகளில் அடுத்தாண்டே மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். மேலும் அடுத்தாண்டு தொடங்கவுள்ள கணக்கெடுப்பு இந்தியாவின் முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பு ஆகும். மொபைல் போன்கள் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மேலும் முழு செயல்முறையையும் நிர்வகிக்கவும், கண்காணிக்கவும் வெப் போர்டல் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது.